März 28, 2024

ஜெர்மனியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு -6 பேர் உயிரிழப்பு!

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மழையால் நேற்றிரவு அஹர் நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 6 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியின்போது 2 தீயணைப்பு படை வீரர்கள் பலியாகி உள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 30 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு சில இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து, அதிலிருந்து வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். வீட்டின் கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ள அவர்களை மீட்கும் பணி வேகமாக நடைபெறுகிறது. தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருடன், ராணுவமும் மீட்பு  மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.

வெள்ளப்பெருக்கால் ரெயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து மற்றும் ரைன் நதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.