April 19, 2024

ஊடகவியலாளர்களை அச்சறுத்திய புலனாய்வாளர்கள்

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு விமானப்படைத்தளத் தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தலிலுள்ள இலங்கை ஆசிரியர்சங்க செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்காக இலங்கை ஆசிரியர்சங்கத் தலைவர் ரியந்த பர்னாந்து தலைமையில், இலங்கை ஆசிரியர்சங்க வடமத்தியமாகாண இணைப்பாளர் ஜே.எம்.மில்லியாஸ், இலங்கை ஆசிரயர்சங்க வவுனியா மாவட்ட தலைவர் பாஸ்கரமூர்த்தி நேசராஜா உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் கேப்பாப்புலவு விமானப்படைத்தளத்திற்கு சென்றிருந்தனர்.

இந் நிலையில் அங்கு செய்தி அறிக்கையிடலுக்காக சென்ற ஊடகவியலாளர்கள், அங்கிருந்த புலனாய்வாளர்களின் செயற்பாடுகளால் செய்தி சேகரிப்பதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பாக ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும்போது அவர்களைச் சூழ்ந்து பாரிய அளவில் புலனாய்வாளர்களும் தமது கைபேசிகள் மூலம் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் எடுத்துள்ளனர்.

இதனால் ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்பிற்கு பாரிய இடையுறு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.