März 29, 2024

எவருக்கும் இடமளியோம் – பிரதமர் மஹிந்த சூளுரை

 

எமது நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (07) தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற 131ஆவது தேசிய தொல்பொருள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

எங்கள் தேசத்தைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். அந்தப் பண்டைய மரபுரிமை பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம். அந்த மரபுரிமையை இன்றுவரை பாதுகாக்க முடிந்தமையாலேயே உலகத்தின் பார்வையில் நாம் ஒரு பெருமைமிக்க தேசமாக உயர முடிந்தது என்று நான் நம்புகிறேன்.

எமது நாட்டின் அந்த பண்டைய மரபுரிமையை வெளிக்கொணர்ந்து அவற்றை பாதுகாப்பது தொல்பொருள் திணைக்களமாகும். அவர்கள் அதற்காக பல்வேறு அர்ப்பணிப்புகளை மேற்கொள்கின்றனர். அந்த மரபுரிமைகளை பாதுகாப்பதுடன் அது தொடர்பில் மக்களுக்கும் தெளிவுபடுத்துகின்றனர்.

1890 ஆம் ஆண்டு இது போன்றதொரு நாளிலேயே இத்திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில் இத்திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 131 ஆண்டுகளாகின்றன. இந்த நீண்ட காலப்பகுதியில் தொல்பொருள் திணைக்களம் ஆற்றிய பணிகளை வார்த்தைகளால் கூறி முடிக்க முடியாது.

எனினும் அது நாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட உன்னத பணி என்பதை நான் இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த வேண்டும். அன்று பெல் அவர்கள் பண்டைய மரபுரிமைகளை வெளிப்படுத்த அனுராதபுரத்தில் முதல் அகழ்வை மேற்கொண்டு ஆரம்பித்து வைத்த தொல்பொருள் அகழ்வு இன்றுவரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நீங்கள் அனுராதபுரம், பொலனறுவைக்கு செல்லும்போது இது சார்ந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த இடங்களுக்குச் செல்லும்போது, உலகில் வேறு எந்த தேசத்திற்கும் இல்லாத பெருமை நமக்கு இருப்பதாக இயல்பாகவே உணர்கிறோம். அதனை உணர்ந்த எவருக்கும் இந்த நாட்டின் மீதான அன்பு குறையாது என்பது எமக்கு தெரியும்.

தம்பதெனிய, யாபஹுவ போன்ற இடங்களுக்கு சென்றாலும் இதே நிலைதான். இத்திணைக்களத்தினால் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்ட சேவையினாலேயே இந்த அனைத்து இடங்களும் நாம் காணும் அளவிற்கு பாதுகாப்பாக உள்ளது.

அவர்கள் கடந்த காலத்தை ஆராய்ந்து தற்போது அந்த மரபுரிமையை கண்டுபிடிப்பது மாத்தரமன்றி, எதிர்காலத்திற்காக அந்த மரபுரிமையை பாதுகாப்பதற்கும் பாரிய பங்களிப்பு செய்கின்றனர்.

இது முழு உலகமும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தருணம் என்பதை நாம் அறிவோம். அந்த சவாலை வெற்றிக்கொள்வதற்கு ஒரு தேசமாக நாம் போராடி வருகின்றோம். நாட்டிற்கு எத்தகைய சவால்கள் ஏற்படினும் அதனை எதிர்கொள்வதற்கு எமது முன்னோர்கள் விட்டுச்சென்ற மரபுரிமைகள் எமக்கு ஒரு பலமாக இருக்கும்.

இன்று இவ்வாறானதொரு தொற்று நிலை இல்லாதிருப்பின் ஆண்டுக்கு இலட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் எமது நாட்டின் அழகையும், பண்டைய மரபுரிமைகளையும் பார்வையிட இலங்கைக்கு வந்திருப்பார்கள்.

சீகரியா மற்றும் தம்புள்ளைக்கு அதில் மிகச் சிறப்பான மதிப்புள்ளது. அன்று பெல் அவர்கள் காடுகளினால் சூழப்பட்டிருந்த சீகரியாவை கண்டுபிடித்து அதன் தொல்பொருள் மதிப்பை ஆராய ஆரம்பித்தார். செனரத் பரணவிதான சீகிரியாவை பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி சீகிரியா பற்றி கவிதை புனைவதற்காக ஆயிரம் தடவைகள் சீகிரியாவில் ஏறியுள்ளதாக நாம் கேள்விபட்டுள்ளோம்.

தொல்பொருள் துறையின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கப்பட்ட சீகிரியாவின் அகழ்வாராய்ச்சிகள் இன்னும் நிறைவடையவில்லை. இன்று சீகிரியா ஒரு உலக பாரம்பரிய தளம் மட்டுமல்ல, உலகின் அதிசயமும் கூட. இது அனைத்தும் தொல்பொருள் திணைக்களத்தின் காரணமாகும்.

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் கூட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தமது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர. அவர்கள் ஒருபோதும் தமது பணியை கைவிடவில்லை. நாட்டை காப்பது போன்றே அவர்கள் பணியாற்றுகின்றனர்.

எமது அமைச்சின் செயலாளர் தொடர்ந்து எம்மவர்களின் தேவை குறித்து அடிக்கடி நினைவுபடுத்துவார். அவற்றை நாம் நிறைவேற்றுவோம். அதனால் சிரமம் பாராது எதிர்கால சந்ததியினருக்காக தொல்பொருள் தளங்களை பாதுகாத்து, புதிய அறிவை உலகின் மத்தியில் முன்வைத்த அனைவருக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம்.

பண்டைய கால மனிதன் தொடர்பில் அண்மைய வெளிப்பாடு வெளிநாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உட்பட முழு உலகின் கவனத்தையும் ஈர்த்ததை நாங்கள் கண்டோம்.

கிழக்கு மாகாணம் என்பது பல தொல்பொருள் தளங்களை கொண்ட இடமாகும். சேருவில, முஹுது மஹா விகாரை, கிரிகடுசேய, லங்காபடுன, கோணேஸ்வரம் போன்ற வரலாற்று இடங்கள் பல அங்குள்ளன.

ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அந்த இடங்கள் நீண்ட காலமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. சில சமயங்களில், நாட்டை ஆட்சி செய்தவர்கள் கூட அவை அழிக்கப்படும் வரை காத்திருந்தனர்.

தொல்பொருள் தளங்களை என்ன செய்வது என்று அவர்கள் கேட்ட ஒரு காலம் இருந்தது. நினைவுச்சின்னங்கள் கொன்கிரீட் இடப்பட்டு மூடப்பட்டிருந்தன.அவை குறித்து புதிதாக கூற வேண்டியதில்லை.

ஆனால் மக்கள் இவற்றை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். இவை எமது நாட்டின் மரபுரிமை. அவற்றை அழிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. இடமளிக்கவும் மாட்டோம் என்றார்.