April 23, 2024

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக சீன நாட்டவர்! – முக்கிய அரசியல்வாதி வெளிப்படுத்திய தகவல்

 

தற்போதைய அரசாங்கம் இரட்டை குடியுரிமை கொண்டவர்களை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட அனுமதித்துள்ளதால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சீன நாட்டவர் கூட வேட்பாளராக மாற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்

“அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான முடிவு ஐக்கிய மக்கள் சக்தியின் உள் முடிவாகும். எனினும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த கட்சிகள் இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம்.

தான் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. யார் வேண்டுமானாலும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியும்.

தற்போதைய அரசாங்கம் இரட்டை குடியுரிமை கொண்டவர்களை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட அனுமதித்துள்ளதால், ஒரு சீன நாட்டவர் கூட அடுத்த தேர்தலில் வேட்பாளராக மாற முடியும்,“

இந்நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுவான வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் அரசியல் யதார்த்தங்களால் தீர்மானிக்கப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.