April 18, 2024

அனைவரும் விடுவிக்கப்படவேண்டும்!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் , 60 தமிழ் அரசியல் கைதிகள் உடைய பெயர் பட்டியல் மற்றும் விபரங்களை அனைத்து நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்து இருக்கின்றோமென குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அண்மையில் 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதனை நாங்கள் வரவேற்கிறோம். இது அரசியல் கைதிகளின்  விடுதலைக்கான தொடக்கப் புள்ளியாக அமையும். அதேநேரம் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.  அப்படி ஒரு சம்பவத்தை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். 11 வருடங்கள் தொடங்கி 26 வருடங்களாக சிறையில் இருக்கும் சிறையிலுள்ள 60 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்,தண்டணை விபரங்கள்,வழக்கு விபரங்கள் போன்ற சகல விபரங்களும்  உள்ளடக்கிய கோவை ,225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாங்கள் அனுப்பி வைத்துள்ளோம் .

விரைவாக அவர்களின் விடுதலை  செய்தியை  எதிர்பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் ,அவர்களுடைய பெற்றோரும் எதிர்பார்ப்புடன் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். பாராளுமன்றத்திலே கூறப்பட்ட அந்த விடயங்கள் விரைவாக நடைபெற வேண்டும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

முன்னுக்குப் பின் முரணாக பல மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன 60 பேர் தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர். அந்த விவரங்களை நாம் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அண்மைக்காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உடைய விவரங்களை நாங்கள் தற்போது தயாரித்து கொண்டிருக்கின்றோம். விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் சுமந்திரன் அவர்களுடைய கொலை முயற்சி காரணமாக கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களையும்  நாங்கள் சேகரித்து வருகிறோம்.

அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும். கடந்த காலம் தொட்டு விடுதலை என்று வருகின்றபோது அண்மைக்காலங்களில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.  நீண்டகாலமாக தடுத்து வைக்கப்படவர்கள் அவ்வாறே சிறையில் முடக்கியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா , மைத்திரிபால சிறிசேனா போன்றவர்கள் போல எம்.ஏ. சுமந்திரனும் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்.

2009க்கு பின்னர் 12000 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டனர். அந்த காலப்பகுதியில் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் இருந்தனர். ஆனால் இன்றைக்கும் அந்த அரசியல் கைதிகள் அப்படியே தேக்க நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றார்கள். 25 வருடங்களாக அவர்கள் இருக்கின்றார்கள் வயதானவர்கள் கூட அவர்களில் உள்ளனர்.அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.