April 19, 2024

வடக்கில் சீனரை தேடும் டக்ளஸ் மற்றும் சுமா!

வடக்கில் சீனர்களை தேடி ஒருபுறம் டக்ளஸ் அலைய மறுபுறம் சுமந்திரன் துண்டைகாணோம் துணியை காணோமென தப்பித்த சுவாரஸ்யம் நடந்தேறியுள்ளது.

யாழில் சீன பிரஜை வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக  நேற்று கிளிநொச்சியில் தெரிவித்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தனது டுவிட்டர் தளத்தில் இன்று காலை பதிவேற்றிய புகைப்பட நபர் இலங்கை பிரஜை என அம்பலமாகியுள்ளது.

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளார் என தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதிவேற்றி, அதில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில் அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியும் இருந்தார்.

இந்நிலையில் குறித்த சுமந்திரன் பதிவேற்றியுள்ள படத்தில் உள்ள நபர் சீன பிரஜை இல்லை எனவும் , அவர் அக்கரைப்பற்றை சேர்ந்த மொஹமட் ஹனிபா எனும் இஸ்லாமியர் எனவும் , அவர் யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியை சேர்ந்த  தமிழ் பெண்ணொருவரை திருமணம் முடித்து குடத்தனையில் வசித்து வரும் நிலையில் , அப்பகுதியில் இடம்பெறும் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து தனது பதிவை நீக்கிக்கொண்ட சுமந்திரன் வேறு புதிய படங்களை தேடிவருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே இன்று பூநகரி கௌதாரி முனையிலுள்ள கடலட்டை பண்ணைக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ கடந்த நல்லாட்சி அரசின் காலத்திலேயே சீன நிறுவனத்திற்கு கடலட்டை வளர்ப்பதற்கு வடக்கில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் அங்கு கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சீனருடன் ஒரு செல்பியும் எடுத்துக்கொண்டார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா