März 28, 2024

பயணத்தடை அமுலில் உள்ள போதும் யாழில் அட்டகாசம்

பயணத்தடை அமுலில் உள்ள போதும் யாழ்ப்பாணத்தில் கொள்ளையர்களின் அட்டகாசம் தீவிரம் அடைந்துள்ளது.

சுன்னாகம் கந்தரோடையில் வீடொன்றுக்குள் புகுந்து வாளால் வெட்டி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை மூன்று மணிக்கு கந்தரோடை சங்காவத்தை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் முகங்களை மறைத்தவாறு முகமூடிகள் அணிந்த வண்ணம் கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டின் முன் கதவை உடைத்துக்கொண்டு கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்து, வீட்டில் உள்ளோரை தாக்கிவிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

பெண் ஒருவரின் கழுத்தை நெரித்து அவர் அணிந்திருந்த மூன்று பவுண் பெறுமதியான தங்க சங்கிலி, ஒன்றரை பவுண் கை சங்கிலி , இரண்டு மோதிரம், வளையல்கள் என்பவற்றை கும்பல் கொள்ளையிட்டது. இதன்போது மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்தனர்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 20 – 26 வயதுடைய சங்குவேலி, தெல்லிப்பழை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட ஒரு பகுதி நகைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.