April 25, 2024

கொரோன வைரசினால் பிறந்த குழந்தைகளும் இறக்கின்றனர்!

கொரோனா நோயாளிக்கு பிறந்த 15 நாள் பெண் குழந்தை குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தாய் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளான நிலையில், ஏப்ரல் 1’ஆம் தேதி குழந்தையும் நோய்த்தொற்றுடன் பிறந்தது என டயமண்ட் மருத்துவமனையின் தலைவர் தினேஷ் நவதியா தெரிவித்தார்.

குழந்தையின் தாயார் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோதும்,​​புதிதாகப் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். மேலும் குழந்தையின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியதும் குழந்தைக்கு ரெம்டெசிவிர் ஊசி போடப்பட்டது என்றார்.

செயற்கை சுவாசம் பொருத்தியிருந்த போதும்  குழந்தை நேற்று இரவு இறந்து விட்டது என்று நவதியா கூறினார்.

கொரோனாவிலிருந்து சமீபத்தில் குணமடைந்த சூரத்தின் முன்னாள் மேயர் டாக்டர் ஜெகதீஷ் படேல், குழந்தையின் சிகிச்சைக்காக தனது இரத்த பிளாஸ்மாவை நன்கொடையாக அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“புதிதாகப் பிறந்த குழந்தையை காப்பாற்ற எங்கள் மருத்துவர்கள் தங்களால் முடிந்தவரை முயன்றனர். எங்கள் அறிவின் படி, குஜராத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மிக வயது குறைந்த நபராக இந்த குழந்தையும் இருக்கும்.” என்று நவதியா கூறினார்.