März 29, 2024

மகள் திருமணத்துக்கு 500 கோடி செலவழித்த கோடீஸ்வரர்! ஒரே கையெழுத்தால் இன்று தெருவுக்கு வந்த பரிதாபம்

பெரும் கோடீஸ்வரராக, தொழிலதிபர் லட்சுமி மிட்டல் உள்ள நிலையில் அவரின் சகோதரர் பிரமோத் மிட்டல் மிகவும் திவாலான மனிதராக லண்டன் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரமோத் மிட்டல் தனது தந்தை, மனைவி, மகன் மற்றும் மைத்துனர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடமும் 2.5 பில்லியன் பவுண்ட்ஸ் கடன்பட்டிருப்பதாகத் தெரிவித்ததையடுத்து மிகவும் திவாலான மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மிட்டல் சகோதரர்கள் இந்தியாவில் தங்கள் தொழிலை தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்தினர். லட்சுமி மிட்டலின் ஆர்சலர் மிட்டலின் தலைமையிடமாக நெதர்லாந்து உள்ளது. பிரமோத் மிட்டல் இஸ்பாட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

2006 – ம் ஆண்டு பிரமோத் மிட்டல், போஸ்னிய கோக் தயாரிப்பாளரான குளோபல் இஸ்பாட் கோக்ஸ்னா இண்டஸ்ட்ரிஜா லுகாவக் என்று நிறுவனம் பெற்ற கடனுக்கு உத்தரவாதம் அளித்தார்.

இந்த உத்தரவாத கையெழுத்து தான் பிரமோத் மிட்டலின் வீழ்ச்சியை தொடங்கி வைத்தது. குளோபல் இஸ்பாட் நிறுவனம் 166 மில்லியன் டொலரை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தத் தவறியது. இதையடுத்து 2019 – ம் ஆண்டு போஸ்னியாவில் மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றங்களுக்காக பிரமோத் மிட்டல் கைது செய்யப்பட்டார்.

இதோடு இந்தியாவில் மாநில வர்த்தகக் கழகத்தில் ரூ. 2200 கோடி மோசடி செய்து விசாரணையைச் சந்தித்து வருகிறார்.

2013 – ம் ஆண்டு பிரமோத் மிட்டல் தனது மகள் ஸ்ரீஷ்டியின் திருமணத்துக்காக டச்சு நாட்டைச் சேர்ந்த முதலீட்டு வங்கியாளரான குல்ராஜ் பெஹ்ல் உடன் சேர்ர்ந்து 50 மில்லியன் பவுண்ட்ஸ்களை செலவு செய்தார். அப்போதே இது இந்திய மதிப்பில் 505 கோடி ரூபாய் ஆகும்.

மகள் திருமணத்துக்காகக் கோடிக்கணக்கில் செலவு செய்தவர் தான் தற்போது திவாலாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திவாலாகியுள்ள பிரமோத் மிட்டல், எனக்குத் தனிப்பட்ட வருமானம் எதுவும் இல்லை. நிதி விஷயங்களைப் பொருத்தவரை என் மனைவி என்னிடமிருந்து சுதந்திரமானவள். நாங்கள் தனித்தனியாக வங்கிக் கணக்குகளை வைத்துள்ளோம்.

என் மனைவியின் வருமானம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என் குடும்பம் மற்றும் மனைவியிடமிருந்துதான் எனது தனிப்பட்ட செலவுகளுக்காக ஒவ்வொரு மாதமும் பணம் பெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திவாலான மனிதராக பிரமோத் மிட்டல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது சகோதரர் லட்சுமி மிட்டல் உலகின் பணக்காரர்களுள் ஒருவராக தொடர்ந்து திகழ்ந்து வருகிறார்.