April 25, 2024

வடக்கு கிழக்கு வேலைவாய்ப்பு பற்றி பிரதமரிற்கு கடிதம் அனுப்பிய மாவை! வெளியான முக்கிய தகவல்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பட்டதாரிகளுக்கும் வேலையற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.அவரது கடிதத்தில் விபரம்-

(1).ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் ஜனாதிபதியும் பொதுத் தேர்தலின் பின் அரசும் இலங்கை முழுவதும் வருமானம் குறைந்த ஒரு இலட்சம் வேலை அற்ற இளைஞர்களுக்கு கா.பொ.த சாதாரண தரக் கல்வி கற்றவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதாக அறிவித்தன.

ஆனால் ஓகஸ்ட் 20 இரண்டாம் வாரத்தில் நாட்டின் ஏழுமாவட்டச் செயலகங்களுக்கும் அவ் வேலைவாய்ப்புக்களை வழங்க அரசு ஆணை வழங்கப்பட்டிருக்கும் போது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அவ் வேலைவாய்ப்பை வழங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியும் முறைப்பாடுகளும் எமக்குக் கிடைத்துள்ளன. இது ஒரு அநீதியான அறிவிப்பாகும். ஏற்கனவே 20ஆயிரம் இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு நம்பிக்கையுடனிருந்தவர்கள் இப்பொழுது பெரும் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே போரினால் பாதிக்கபட்ட வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் பெறும் வாய்ப்புக்கள் அறவேயிருக்கவில்லை. பல ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்டு விட்டனர். அவர்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 90ஆயிரம் பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழ்வாதாரமற்று வாழ்வற்று வீழ்ந்து கிடக்கின்றனர். அத்துடன் பல ஆயிரம் இளைஞர்கள் குடும்பங்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்.

ஆனபடியால் தெற்குடன் ஒப்பிடுகையில் வடக்குக் கிழக்கில் வேலையற்ற எண்ணிக்கையில் குறைந்த வீதமான இளைஞர்களே உள்ளனர். இவர்களனைவருக்கும் வேலைவாய்ப்புக்கள் தகமையடிப்படையில் வழங்க வேண்டுமென வற்புறுத்துகிறோம்.

சென்ற “மே” நான்காம் திகதி தங்களைச் சந்தித்த போது இந்நிலமை பற்றியும் நாம் பேசியிருந்தோம். 2015ல் வந்த ரணில் விக்கரமசிங்க அரசிடமும் நாம் விடுத்த வேண்டுகோள் ஏற்கப்பட்டு க.பொ.த.உயர்தரத்தில் சித்தியடைந்த ஏழாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பெறும் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. ஆனால் 2018ல் பாராளுமன்றங் கலைக்கப்பட்டதால் அவர்களுக்கும் வேலைவாய்ப்புக் கிட்டவில்லை.

(2). அடுத்ததாக 50,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க தங்கள் அரசு அறிவித்து வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் (10,000) பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஆனால் வடக்கு கிழக்குப் பகுதியில் விண்ணப்பித்த பட்டதாரிகள் வேiவாய்ப்புப் பெறுவதில் பெரும் தடைகளைச் சந்திக்கின்றனர். எம்மிடமும் முறையிட்டுள்ளனர். வேலைவாய்ப்பைப் பெறும் வாய்ப்புள்ள வடக்கு கிழக்கு போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பட்டதாரிகளுக்கு வேலை பெறுவதில் ஏற்படும் தடை தாமதங்களை நீக்கி விரைவில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வற்புறுத்துகிறோம்.

இக்கடிதத்தினையும் எமது வேண்டுகோள் கடிதத்துடன் இணைத்து அனுப்புகின்றோம்.
இவ்விடயத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள், நாமும் சந்தித்துப் பேசவும் சந்தர்ப்பம் வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றோம்.