காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை – சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை - சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும், கட்சியில் பல்வேறு சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருந்தனர். இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடத்தப்பட்டது.

இதில் பேசிய சோனியா காந்தி, இடைக்காலத் தலைவர் பதவியை தொடர தான் விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே. ஆண்டனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலர், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கட்சித் தலைவர் பதவியை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் பாஜவுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியதாக தகவல் வெளியானது. இதை அடுத்து, ராகுல் காந்திக்கு பதில் அளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட மூத்த தலைவர் கபில் சிபல், நெருக்கடியான தருணங்கள் உள்பட அனைத்து தருணங்களிலும் கட்சிக்கு விசுவாசமாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். பின்னர் தனது பதிவை அவர் நீக்கினார். ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த பதிவை நீக்கியதாக கபில் சிபல் விளக்கம் அளித்துள்ளார்.