März 29, 2024

பிள்ளையானிற்கும் விடுதலை?

கோத்தா அரசில் கொலையாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் அடுத்து பிள்ளையானிற்கும் விடுதலை கிட்டியுள்ளது.

விரைவில் விலங்கினை உடைத்து வெளியே வருவேன் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதில் கலந்துகொள்ளுவதற்காக மட்டக்களப்பு மேல்நீதிமன்றில் நகர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதனை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.எம்.சூசைதாசன், நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கும் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொள்வதற்கு அனுமதியை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சந்திரகாந்தன் விரைவில் விலங்கினை உடைத்து வெளியில் வந்து அனைவருடனும் பேசுவதாக தெரிவித்துள்ளார்.