April 19, 2024

காணாமல் ஆக்கப்பட்ட பெண்ணினுடையதா?

 

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள தனியார் காணியில் பெண்  ஒருவருடையது என்று நம்பப்படும் மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் நிலத்துக்கடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியில் மனித வன்கூட்டு தொகுதியின் கால்ப்பகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

புதைகுழி இடத்தில் பற்பசை, பல் விளக்கும் பிறஸ், மேற்சட்டைகள், உள்ளிட்டவை துணியிலான கைப்பையில் காணப்பட்டுள்ளன. அவற்றை வைத்து ஒப்பிடுகையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு அந்த இடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணர் உ.மயூரதன், முன்னிலையில் இந்த மனித எச்சங்கள் இன்று செவ்வாய்கிழமை மீட்கப்பட்டன.

யாழ்ப்பாணம் பண்ணை மீனாட்சி அம்மன் கோவில் வீதியில்   தனியார் காணி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை காலை மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் நிலத்தை அகழும் போது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களை சான்றுப்பொருள்களாகக் கொண்டு மேலும் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து மனித எச்சங்கள் உள்ளனவா என்று ஆராய்வதற்கு காவல்துறையால்; விண்ணப்பம் செய்யப்படடிருந்தது.

ஆதனை தொடர்ந்து நீதிமன்ற அனுமதி பிரகாரம் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.