März 28, 2024

ஒற்றையாட்சியை ஏற்காமல் நாடாளு மன்றம் செல்ல முடியாது – கஜேந்திரகுமார்

ஒற்றையாட்சியை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்யாமல், யாரும் நாடாளுமன்றம் சென்று மக்களின் குரலை பதிவு செய்ய முடியாது. நாங்கள் தமிழீழத்தை பற்றி பேசவில்லை. 6வது திருத்தம் இருக்கும் வரை நாம் தமிழீழ தனிநாட்டை கோர முடியாது. தமிழர்கள் ஒரு தேசமாக இருப்பதை அங்கீகரிக்காமல் இருப்பதே பிரச்சனைக்கு காரணம். தமிழ் தேசத்தை அங்கீகரிப்பதே தீர்வாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.இன்று தனியார் தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒற்றையாட்சியை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்யாமல், யாரும் நாடாளுமன்றம் சென்று மக்களின் குரலை பதிவு செய்ய முடியாது. அதற்குள் போய் நீங்கள் எதைக் கதைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

நாங்கள் தமிழீழத்தை பற்றி பேசவில்லை. 6வது திருத்தம் இருக்கும் வரை நாம் தமிழீழ தனிநாட்டை கோர முடியாது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ கோர முடியாது. தனிநாடு கோர முடியாவிட்டாலும், ஒரு தனிநாடு ஏன் அவசியமாக இருக்கிறது என்பதை பார்த்தால், கடந்த 72 வருடமாக தமிழர்கள் ஒரு தேசமாக இருப்பதை அங்கீகரிக்காமல் இருப்பதே பிரச்சனைக்கு காரணம். தமிழ் தேசத்தை அங்கீகரிப்பதே தீர்வாக இருக்கலாம்.

இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசு அமைந்து விட்டது. அந்த தரப்பு வேறு எவரையும் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவையில்லை. ஆனால் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும்.

பொறுப்புக்கூறல் விவகாரத்தை மிக தீவிரமாக முன்கொண்டு செல்லப் போகிறோம். இன்று அதிகாரத்திலுள்ளவர்கள் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவற்றை முன்கொண்டு செல்லும்போது, தனிப்பட்டரீதியில் அவர்களிற்கு நெருக்கடி ஏற்படும்.

நாம் ஒரு மாற்றத்தை முன்வைத்து மக்கள் ஆணை பெற்றவர்கள். அந்த கொள்கையை நாடாளுமன்றத்திற்குள் முன்னெடுப்போம். அந்த கொள்கையை ஏற்று எம்முடன் இணைந்த செயற்படுபவர்கள் இணையலாம் என தெரிவித்தார்.