März 29, 2024

அரசாங்கத்தின் மிரட்டல்களை எதிர்கொள்ள எம்முடன் இணையுங்கள்

அரசாங்கம் திட்டமிட்டு முன்னாள் போராளிகளை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களை எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாத வகையில் வைத்திருப்பதற்கான நிலையை ஏற்படுத்துகின்றனர். அந்த விடயத்திற்கு ஒரு போதும் நாங்கள் இடம் கொடுக்க முடியாது.

எனவே அனைத்து முன்னாள் போராளிகளும் ஒன்றினைந்து தனித்துவத்தோடு, நீங்கள் எங்களுடன் இணைய வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை(18) அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில் விடுதலைப்புலிகள் மீண்டும் வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

அதன் பிண்ணனியில் இங்கு இருக்கின்ற முன்னாள் போராளிகளை விசாரணை செய்கின்ற வகையில் புலனாய்வுத்துறையினர் விசாரணை என்ற போர்வையில் முன்னாள் போராளிகளின் விபரங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் கண்டிக்கத்தக்க விடையம்.

முன்னாள் போராளிகளை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் போராளிகளுக்கு ஒரு செய்தியை கூற விரும்புகின்றேன்.

நீங்கள் அச்சப்பட தேவையில்லை. நாங்கள் உங்களுக்காக குரல் கொடுப்போம். அந்த வகையில் நீங்கள் அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.தமிழ் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து செயல்பட வேண்டும்.

நாங்கள் உங்களை இணைத்துக் கொள்ள தயாராக இருக்கின்றோம். எனவே குறித்த பிரச்சினைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால், அரசாங்கம் திட்டமிட்டு எமது போராளிகளை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களை எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாத வகையில் வைத்திருப்பதற்கான நிலையை ஏற்படுத்துகின்றனர்.

அந்த விடயத்திற்கு ஒரு போதும் நாங்கள் இடம் கொடுக்க முடியாது. எனவே அனைத்து முன்னாள் போராளிகளும் ஒன்றினைந்து தனித்துவத்தோடு, நீங்கள் எங்களுடன் இணைய வேண்டும்.

கூட்டமைப்பில் உள்ள எந்தக் கட்கிளுடனும் இணைந்து கொள்ளுவதை தவிர்த்து நீங்கள் தனித்துவமான விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் என வருகின்ற போது அது இன்னும் வலுவடையக் கூடிய வாய்ப்பு உள்ளது.

எனவே பிரச்சினைகளை நாங்கள் கையாள வேண்டுமாக இருந்தால் பிரிந்து இருக்காமல் ஒற்றுமையாக ஒன்று கூடி எங்களுடன் வந்து இணைந்து கொள்ள வேண்டும்.

எங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது உங்களுடன் நாங்கள் இருப்போம். உங்களுக்காக குரல் கொடுப்போம்.
முன்னாள் போராளிகளை தொடர்ந்தும் அச்சத்திற்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்ப உள்ளேன்.

வீடமைப்பு திட்டத்திற்கு அமைச்சராக உள்ள காரணத்தினால் குறித்த கடிதத்தை அனுப்பவுள்ளேன். கடந்த அரசாங்கத்தில் சஜித் பிரேமதாச வீடமைப்புத்துறை அமைச்சராக இருந்த போது மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் பல பயனாளிகள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வீட்டுத்திட்டத்தை ஆரம்பிக்கின்ற போது 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை மட்டுமே வீட்டு நிர்மானத்திற்கு நிதி வழங்கப்பட்டது.

குறித்த வீட்டுத்திட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது வீட்டுத்திட்டத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்தின் காரணமாகவே குறித்த வீட்டுத்திட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்ததன் காரணத்தினால் குறித்த வீட்டுத்திட்ட பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது. எமது மக்கள் பல்வேறு துன்ப துயரங்களை சந்தித்து வருகின்றனர். வீட்டை கட்டி முடிக்க வேண்டும் என்பதற்காக பணத்தை வட்டிக்கு பெற்றுள்ளனர். உடமைகளை அடகு வைத்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் தற்காலிக வீடுகளையும் உடைத்துள்ள நிலையில் அந்த மக்கள் இன்றைக்கு தெருவில் நிற்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே புதிய பிரதமர் இந்த வீட்டுத்திட்டத்திற்கு பொறுப்பாக உள்ள சூழ்நிலையில் வீட்டுத்திட்டங்கள் சஜித் பிரேமதாசவினுடையது என ஒதுக்கி விடாமல் எமது மக்களின் வீட்டுத்திட்டங்களை பூரணப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அவசர கடிதம் ஒன்றை அனுப்ப உள்ளதோடு பாராளுமன்றத்திலும் இவ்விடயம் தொடர்பாக குரல் கொடுக்க உள்ளேன். வீட்டுத்திட்டத்தை முழுமையாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.