März 29, 2024

பொதுஜன பெரமுனவின் அடுத்த நகர்வு!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர்களை தீர்மானிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீவிர கவனம் செலுத்தி வருவதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு அமைச்சுப் பதவி அல்லது இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படாத சிரேஷ்ட உறுப்பினர்களை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த அக்கட்சி கவனம் செலுத்தி வருகிறது.

இதன்படி,

சப்ரகமுவ மாகாணம் – ஜோன் செனவிரட்ன,
வடமேல் மாகாணம் – அநுர பிரியதர்ஷன யாப்பா,
மேல் மாகாணம் – சுசில் பிரேமஜயந்த,
ஊவா மாகாணம் – டிலான் பெரோரா,
தென் மாகாணம் – ஷான் விஜேலால் டி சில்வா அல்லது சந்திம வீரக்கொடி
ஆகியோரை முதலமைச்சர் வேட்பாளர்களாக நிறுத்துவது குறித்து பொதுஜன பெரமுன ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதேவேளை, அரசியலமைப்பிற்கு அமைய நாடாளுமன்றத்தில் இருந்து கீழே உள்ள அரசியல் நிறுவனம் ஒன்றுக்கு போட்டியிட வேண்டுமாயின் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு இராஜினாமா செய்யும் பட்சத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்து இருக்கும் நபருக்கு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.