April 23, 2024

கொரோனா அதிகரிப்புக்கு மத்தியில் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

கொரோனா அதிகரிப்புக்கு மத்தியில் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் தொகையும் அதிகரித்து வருகிறது.

இதன்படி கொரோனா பலி எண்ணிக்கை இன்னும் சில தினங்களில் 2 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது. இந்த சூழலில், அமெரிக்காவில் பள்ளிக் கூடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நாங்கள் திறக்கப் போகிறோம் என ஜனாதிபதி டிரம்ப் இன்று கூறியுள்ளார்.

அவர் கூறும்பொழுது, குழந்தைகள் பல நேரங்களில் குறைந்த அளவிலான அறிகுறிகளையே கொண்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவம் சார்ந்த சிக்கல்கள் ஏற்படுவது என்பது உண்மையில் மிக அரிது என கூறினார். குழந்தைகள் வகுப்புகளுக்கு திரும்பவில்லை எனில், அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று டிரம்ப் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்திற்கு நாட்டின் பொருளாதாரம் மேம்படும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நெருக்கடியான நிலையில் டிரம்ப் உள்ளார். அதனால், கொரோனா பாதிப்புள்ள சூழலிலும் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் பள்ளிக் கூடங்களை திறக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எனினும், கல்லூரிகள் திறப்பினால் 151 பேருக்கும், பள்ளிக் கூடங்கள் திறப்பினால் 71 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவலொன்று தெரிவிக்கிறது.