April 25, 2024

சிங்கள் நிகழ்ச்சி நிரலுக்குள் ‚சும்‘ வடக்கின் கருணாவாக மாறிய ‚சிறி‘

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கான காரணங்களின் கருணாவின் காட்டிக்கொடும்பும் ஒன்று என்பது இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் பதிந்து போயிருக்கிறது.
சிங்கள பெரும்பான்மை அரசின் சலுகைகளுக்கு விலைபோன கருணா விடுதலைப் புலிகளின் போர் நகர்வு நுட்பங்களை காட்டிக்கொடுத்து இன்று தமிழ் மக்கள் முன் துரோகி என்ற பட்டத்தோடு நிற்கின்றார்.
இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் கடந்த இரண்டு பாராளுமன்றத் தேர்தல், வடக்கு மாகாணசபை தேர்தல், இரண்டு உள்ளுராட்சித் தேர்தல்களின் முடிவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலம்வாய்ந்த அணியாக தமிழ் மக்கள் மத்தியில் இருந்தமை அரசாங்கத்துக்கு பெரும் தலையிடியை கொடுத்திருந்தது.
தமிழ் மக்களின் அரசியல் இருப்பை தேர்தல்களால் வெற்றிகொள்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அரசு விடுதலைப்புலிகளை எவ்வாறு பிரித்து பலவீனமடையச் செய்து அவர்களுக்குள்ளேயே மோதவிட்டு அழிவடையச் செய்தார்களோ அதே பாணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் உடைத்தெறியும் நிகழ்ச்சி நிரலை மகிந்த அரசு ஆரம்பித்திருந்தாலும் 2015 ஆட்சி மாற்றம் மகிந்த அரசின் செயற்றிட்டங்களுக்கு பின்னடைவை கொடுத்திருந்தது.
ஆனாலும் அரசாங்கம் தமது நிகழ்ச்சி நிரலை கிடப்பில் போட்டிருக்கவில்லை. காலம் வரும்வரை காத்திருந்தது. அதற்கான காலமும் மகிந்த அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு கடந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியதை அடுத்து மகிந்த அணியினர் உற்சாகமடைந்தனர்.
அப்போதே தமது செயற்றிட்டங்களை மெதுவாக ஆரம்பிக்க தொடங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் சிறிய பிளவுகளை ஏற்படுத்த முனைந்து உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாட்டுப் பொறியை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் ஆராய்வதற்கு முன்னர் சிறிய விடயத்தை இவ்விடத்தில் தொட்டுச் செல்வது பொருத்தமாகும். (இப்போது விடயத்துக்கு வருவோம்…….என்ற இடத்தில் மீள தொடரும் )

விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பலத்தை சிதைப்பதற்கான நடவடிக்கையில் களமிறங்கியது மகிந்த அரசு. இதற்கு மூளையாக செயற்பட்டவர் பசில் ராஜாபக்ச.
பசில் ராஜபக்சவுக்கு முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு ஒரு கருணா தேவைப்பட்டார். தேடினார்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு அதற்கும் ஒரு படிமேலே லக்ஸ்மன் கதிர்காமர் போன்ற படித்த சட்டம் தெரிந்த சுமந்திரன் பசிலின் வலைக்குள் சிக்கினார். பசில் உற்சாகமானார். பெட்டிகள் பறந்தன.
கூட்டமைப்பை உடைக்கும் திட்டத்துக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து ஐ.நாவில் இலங்கை அரசாங்கம் மீதான கறையை போக்குவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பை பயன்படுத்த திட்டமிட்ட போதுதான் 2015 ஜனாதிபத்தித் தேர்தல் மகிந்த அணிக்கு பேரிடியாக அமைந்தது.
நல்லாட்சி காலத்தில் மகிந்த அணி தோற்றாலும் ரணில் ஊடாக தமது கைங்கரியத்தை ஐ.நாவில் அரசாங்கத்துக்கு காலநீடிப்பை பெற்றுக்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பை வைத்தே காய் நகர்த்தியது. அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டு என்பதால் எந்த அரச தரப்பும் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்கே முனையும் என்பது சொல்லிப் புரியவேண்டியதில்லை.
இக்காலப் பகுதிக்குள் காலநீடிப்பு முதல் அரசாங்கத்தில் பௌத்த மயமாக்கல் வரவு செலவுத்திட்டம் வரை அரசாங்கத்தை எதிர்க்காது அரசின் பங்காளர்களாக செயற்பட்டமை தமிழ் மக்களை கடும் விரக்தி நிலைக்குத் தள்ளியிருந்த போதும் அரசியலமைப்பு எனும் மாயையை காட்டி மக்களை அமைத்திப் படுத்த கூட்டமைப்பு முனைந்திருந்தாலும் கணிசமான மக்கள் கூட்டமைப்பின் மீதான கடும் கோபத்தை கடந்த உள்ளுராட்சி தேர்தலில் வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆனாலும் கூட்டமைப்பு பெரும்பான்மையான சபைகளை கைப்பற்றியது. இதற்கு கூட்டமைப்பு பின்பற்றிய வழிமுறைதான் மத்தியில் அல்ல பிரதேசத்திலும் ஆளும் அரசாங்கம் மற்றும் கூட்டமைப்பால் விமர்சிக்கப்பட்ட ஈ.பி.டி.பி என்பவற்றுடன் ஆட்சியமைப்புக்காக கைகோர்த்தது. இது வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையினையும் கூட்டமைப்பு மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
குறித்தகாய் நகர்த்தல்களின் பின்னர் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்கும் சக்தி வெளியில் இல்லை சுமந்திரன் வடிவில் அரசாங்கம் உள்நுழைந்து தனது நிகழ்ச்சி நிரலை நடத்துகின்றது என்ற எதிர்த்தரப்பு தமிழ் தேசியக் கட்சிகளின் குற்றச்சாட்டை தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்டனர்.
இவ் உள்ளுராட்சித் தேர்தலில் மகிந்த களமிறக்கிய தாமரை மொட்டு சிங்கள தேசத்தில் மலர்ந்தது. இதன்பின்னர் ஜனாதிபதி தேர்தல் மகிந்த அணியை அசைக்கமுடியாத சக்தியாக வெளிப்படுத்தியது.
ஆட்சி மகிந்த தரப்புக்கு தாவியது. பசிலின் ஆட்டம் ஒரு புறம் திரைமறைவில் நகர்ந்து கொண்டே இருந்தது. இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் தனது ஆட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டார்.
சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் சர்ச்சைகளை ஏற்படுத்துவார் ஆனால் பிளவை ஏற்படுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்து கருணாவை, ஒரு கறுப்பு ஆட்டை தேடும் படலம் ஆரம்பித்த பசிலின் கண்களுக்கு மிக இலகுவாக அகப்பட்டுக் கொண்டவர்தான் இன்று தன்னிலை மறந்து சுமந்திரனின் புகழ்பாடும் சிறீதரன் எம்.பி.
ஆச்சரியமான விடயமாகத்தான் தோன்றினாலும் அவர் எவ்வாறு சிக்க வைக்கப்பட்டார். கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் தனிநபராக சுமந்திரனின் செயற்பாடுகளை எதிர்த்து நின்ற உண்மையான தமிழ் தேசியவாதி எவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரானவராக மாற்றப்பட்டார் என்பதற்கெல்லாம் கிடைக்கும் ஒரே பதில் சிவஞானம் சிறீதரனின் பேராசை மட்டுமே.
சிறீதரன் யார்? அவர் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கும் முன்னர் இருந்த நிலையென்ன? அரசியலுக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும் நிலச் சுவாந்தராக எப்படி மாறினார்? என்பதற்கான விடைகளை தேட முனைந்தார் பசில்.
இத்தேடலில் முதலில் சிக்கியதுதான் தனது மனைவி பெயரில் பூநகரி மண்ணித்தலை பகுதியில் அரசாங்கத்துக்கு சொந்தமான 36.5 ஏக்கர் மணல் பூமி சட்டவிரோதமாக மாற்றப்பட்டிருந்தது. இதனை துருவி ஆராய்ந்த போதுதான் அதற்குப் பின்னால் பல அரச உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டமை தெரியவந்தது.
குண்டுமணி கிடைத்தால் குண்டாக்கத்தெரிந்த பசிலுக்கு இதைவிட வேறென்ன வேண்டும். சிறீதரன் சொத்துக்கள் தொடர்பில் சகலதையும் சேகரித்தார். யாழ்பாணத்தில் மாடிவீடு, கிளிநொச்சி நகர்ப் பகுதிக்குள் 27 கடைகள், கிளிநொச்சி பராசக்தி தியேட்டர், வட்டக்கச்சி, தருமபுரத்தில் விடுதலைப்புலிகள் முன்னர் முகாமிட்டிருந்த 6 காணிகள் (26 ஏக்கர் 3 பரப்பு ) கொழும்பு வெள்ளவத்தை தமிழ் சங்கத்தின் அருகில் பிளாட்ஸ் ( நான்கு மாடிகள் 33 அறைகள் கொண்டது) இவையனைத்தின் மதிப்பும் சிறிதரன் பாராளுமன்றத்தில் இன்னும் 10 தடவைகள் இருந்தாலும் உழகை;க முடியாதவை அப்படியானால் இவை எப்படி வந்தது.
பசிலின் புலனாய்வு வேட்டை திசை திரும்பியது. சிறீதரனின் வங்கிக் கணக்குகள் துருவி ஆராயப்பட்டன. எதுவும் சிக்கவில்லை. அவரது உறவுகள் யார்? எங்கு இருக்கிறார்கள்? விபரம் பசிலின் கைகளுக்கு பறந்தது. தீவிரதேடலில் பின்னர்தான் யாழ்பாணத்தின் பெரும் பணமுதலை ஒன்று சிக்கியது.
சிறீதரனுக்கு குறித்த யாழ்ப்பாணத்து நகைக்கடை உரிமையாளர் ஊடாகவே புலம்பெயர் நாடுகளில் இருந்து மக்களின் அபிவிருத்திக்காக பெரும் தொகை பணம் மாதாந்தம் அனுப்பப்பட்டமை வெளிச்சத்துக்குவந்தது.
மறுநாளே உரிய வியாபாரி நாலாம் மாடிக்கு தூக்கப்பட்டார். தூக்கப்பட்ட அன்றையதினம் சிறீதரன் முதன் முதலாக சுமந்திரனிடம் உதவிகோரும் நிலைக்குத் தள்ளப்பட்டார். சுமந்திரனால் திட்டம் தீட்டப்படுகின்றது. 3 தினங்களின் பின்னர் விடுதலைப்புலிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டதாக கூறி நாலாம் மாடி விசாரணைக்கு அழைக்கப்படுகின்றார் சிறீதரன். மக்கள் தமது தலைவனை வேண்டுமென்றே மகிந்த அணி விசாரிப்பதாக மனம் நொந்தனர்.
அன்றிலிருந்து சுமந்திரனின் கைப்பாவையாக மாறுகின்றார் சிறீதரன். காலம் வரும்வரை காத்திருந்த பசிலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கான கருணாவா, கறுப்பு ஆடாக சிறீதரன் மீளமுடியாது சிக்கிக்கொண்டார். சிறீதரனை பொறுத்தவரையில் இப்போது போலி தமிழ் தேசிய வாதம் கக்கும் சிங்களவராகவே மாறியிருக்கிறார்.

இப்போது விடயத்துக்கு வருவோம்…….

பசிலுக்கு மேலும் தலையிடியை கொடுத்த விடயம் வடக்கு மாகாண சபை முதல்வராக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவாகியமை. அவரின் தெரிவின் போது கொழும்பில் வசித்தவர் வாசுதேவவின் சம்பந்தி அரசாங்கத்துக்கு எதிரான மென்மையான போக்கை கொண்டிருப்பார் என்பது பசிலின் கணக்கு.
மாறாக சுமந்திரன், சிறீதரன் ஆகியோர் தமது கையை மீறிப் போகமாட்டார் என்றே எண்ணினர். ஆனால் அரசியலுக்குள் வந்து சில வருடங்களிலேயே விக்னேஸ்வரன் தான் தவறான பாதைநோக்கி நகர்த்தப்படுவதை உணர்ந்தார்.
இதற்கு முதல் உதாரணம் விக்னேஸ்வரன் பதவியேற்பது யாழ்பாணத்தில் ஒரு முக்கியமான நீதிபதி முன் என்று தெளிவாக வெளிப்படுத்தினார். அதனை அனைவரும் ஏற்றனர். ஆனால் சுமந்திரன் சம்பந்தனின் கடுமையான அழுத்தத்தால் அரசியலில் அன்றுதான் புகுமுக மாணவரான விக்னேஸ்வரன் மகிந்தவுக்கு முன்னால் அனுப்பப்பட்டார். தமிழ் மக்கள் எதுவும் புரியாமல் விழித்தனர்.
சில வருடங்கள் கழிந்தன. சி.வி.விக்னேஸ்வரன் தலைமைதாங்கிய அமர்வில் பல தடவைகள் இனஅழிப்பு தீர்மானம் சிவாஜிலிங்கத்தால் கொண்டுவரப்பட்டது. அவற்றை சம்பந்தன் சுமந்திரன் நெறிப்படுத்தி விக்னேஸ்வரனாலேயே தடுத்து நிறுத்தும் செயற்பாட்டை மேற்கொண்டனர். அடுத்தடுத்து மூன்று தடவைகள் விக்னேஸ்வரன் இனஅழிப்பு தீர்மானத்தை தடுத்தார். மக்கள் மத்தியில் அதிருப்திகளை தேடிக்கொண்டார். ஆனால் பசில் மத்தியில் மனம் குளிரச்செய்தார் சுமந்திரன்
இக்காலப் பகுதியில் தான் விக்னேஸ்வரன் இந்தியா செல்லத் தயாராகிறார். அதனை தடுத்து நிறுத்தும் மறைமுக சதிகள் மேற்கொள்ளப்பட்டன. வெளித் தொடர்புகளை ஏற்படுத்த விடக்கூடாது என்பதில் சுமந்திரன் இறுக்கமாக பேணினார். அப்போதுதான் விக்னேஸ்வரன் தான் கட்டுப்படுத்தப்படுவதை உணர்ந்தாலும் அவற்றைப் பெரிது படுத்தவில்லை.
இந்தியா சென்று திரும்புகின்றார். அந்த பயணத்தின் பின்னர் தான் தனது சொந்தக்கால் நடக்கவேண்டிய தேவை என்ன என்பது குறித்து விக்னேஸ்வரன் உண்மையாகவே உணரத்தொடங்கிய நேரம்.
அப்போது 2 வருடங்களும் 3 மாதங்களும் கடந்திருந்தது. தனது காலில் விக்னேஸ்வரன் மெல்ல நடக்க முனைகின்றார். சிவாஜியின் இனப்படுகொலை தீர்மானம் சபைக்கு கொண்டுவருவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது. அப்போது வெளிநாட்டிலிருந்த சுமந்திரன் அவரது பரிவாரங்களான சயந்தன், சுகிர்தன். ஆகியோர் இருநாட்களில் நாடுதிரும்பி இரவோடு இரவாக பலாலி விமான நிலையம் ஊடாக விசேட விமானத்தில் யாழ்பாணம் வருகிறார்.
நேரடியாகவே விக்னேஸ்வரன் வாசஸ்தலத்தில் சுமந்திரன் வரும்போது இரவு 2.30 மணி. காலையில் அமர்வு. விழித்த விக்கியுடன் விடயம் தொடர்பில் கதைக்க முற்படுகின்றார். விக்னேஸ்வரன் அன்றுதான் சுமந்திரனுக்கு ஒரு வரியில் பதிலளித்து சந்திப்பை முடிக்கின்றார்.
‚அதுதொடர்பில் எமது சபை பார்த்துக்கொள்ளும் நீங்கள் கவலைப்படவேண்டாம். சந்தித்தமைக்கு நன்றி‘ இத்தோடு வெளியேறுகின்றார் சுமந்திரன். ஆனாலும் மறுநாள் தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது.
சுமந்திரனால் மறுபக்கத்தில் முதல்வருக்கெதிராக சதித்திட்டம் தீட்டப்படுகின்றது. முதற்கட்டமாக தமிழரசுக்கட்சியின் பெரும் தலைவர் மாவை மற்றும் சிவஞானத்தோடு உரசலை ஏற்படுத்தி விரிசலை ஏற்படுத்துவதும் முதல்வர் அரங்கிலிருந்து விக்னேஸ்வரனை அகற்றுவது.
அவரது திட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றது. ஆளுநரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒப்படைக்கப்படுகின்றது. வடக்கு மக்கள் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக திரள்கின்றனர். சுமந்திரனின் சிறீதரனின் கனவு பறிபோகிறது. உள்ளுராட்சித் தேர்தலில் விக்னேஸ்வரன் மறுதரப்புக்கு அதரவு கோரும் அளவுக்கு தமிழரசுக்கட்சியில் விக்னேஸ்வரன் கோபம் இருந்தது.
விக்கியின் காலம் முடிந்ததும் புதிய கட்சி உருவாக்கம் பெறுகின்றது. சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரல் வெற்றியளிக்கின்றது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பபை மேலும் பலவீனப்படுத்தி பிரிப்பதற்கான செயலில் களமிறங்குகின்றார் பசில். சுமந்திரன் வேண்டுமென்றே புலிகளுக்கெதிரான கருத்துக்களை தற்செயலாக விதைப்பதுபோல் விதைக்கின்றார். மக்கள் மத்தியில் கூட்டமைப்பின் வாக்கு சரிகின்றது. தனது இருப்பை மட்டும் சீறிதரனுக்கு தமிழரசுகட்கட்சி பதவி தருவதாக ஆசைகாட்டி பெறுகின்றார்.
தமிழரசுக்கட்சி தலைவர் மாவை தோற்கடிக்கப்பட்டார். தலைமைத்துவப் போட்டி உருவானது. தமிழ் கூட்டமைப்பு துண்டு துண்டாக உடையும் நிலை உருவாகியிருக்கிறது.
ஆனாலும் தனது பதவியினை விட்டு கொடுக்கும் நிலையில் சிறீதரன் இல்லாவிட்டாலும் சுமந்திரன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் நிலையில் இருக்கிறார். அவர் ஒருவேளை பாதைமாறினால் அவரது அத்தனை குட்டுக்களும் பகிரங்கமாகும் அரச நில அபகரிப்பில் அவரது மனைவி சிக்குவார். சந்திசிரிக்கும் நிலையேற்படும்.
எதுவுமே செய்ய முடியாத நிலையில் சிறீதரன் தமிழர்க்கு பிரபாகரனாகவும் சிங்களவர்களுக்கு கருணாவாகவும் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஈழ விசுவாசி