März 28, 2024

தமிழரசுக் கட்சியின் தலைமையை சிறிதரன் ஏற்கலாமா? சிவஞானம் பதில்

தமிழரசுக் கட்சியில் இப்போதைக்கு தலைமை மாற்றம் ஏற்பட வேண்டிய தேவை இல்லை என அக் கட்சியின் மூத்த துணைத் தலைவர்களில் ஒருவரான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட தமிழரசுக் கட்சியின் கிளைக் கூட்டம் நேற்று யாழில் நடைபெற்றது.

இக் கூட்டத்தின் முடிவில் தமிழரசுக் கட்சியில் தலைமை மாற்றம் செய்யப்படவுள்ளதா என்றும் சிறிதரன் தலைமை ஏற்கத் தயார் என்றும் கூறியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.

கட்சியின் தலைமை ஏற்கிறது என்று அவர் சொல்வது சரி. ஆனால் அது உரிய நேரத்தில் உரிய காலம் வந்தால் அவர் அதனை ஏற்கலாம். ஆயினும் உரிய நேரம் என்ற ஒன்று இருக்கிறது. ஆகவே அந்த நேரம் வர வேண்டும். மேலும் அவ்வாறு யாரும் வருவதிலோ அல்லது வருவதாகக் கூறுவதிலோ எனக்கு ஆட்சேபனை இல்லை.

இதேவேளை கட்சிக்கு தலைமை மாற்றத்திற்கு இடமிருக்கா என்று எனக்கு தெரியவில்லை. தோல்வியை மையமாக வைத்து கொண்டு தலைமை மாற்றம் என்று பேச முடியாது.

ஏனெனில் இந்திரகாந்தியும் தோற்றது தான் தந்தை செல்வாவும் தோற்றது தான். அமிர்தலிங்கமும் தோற்றது தான் சிவசிதம்பரமும் தோற்றது தான். இவ்வாறு எல்லாரும் தோற்றது தான்.

அதிலும் மகிந்த ராஜபக்சவும் ஜனாதிபதி தேர்தலில் தோற்றவர் தான். ஆகவே தோல்வி என்பது தலைமை மாற்றத்திற்காக அடிப்படைக் காரணி அல்ல என்றார்.

மேலும் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் தேர்தல் தோல்வி தொடர்பில் கட்சியை மறுசீரமைக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கின்றாரே எனக் கேள்வி எழுப்பிய போது அதற்குப் பதிலளிக்கையில், காலப் போக்கில் அதனை பார்ப்போம். அது வந்த பின்னர் பார்க்கலாம். கட்சி இப்ப அதைப்பற்றி சொல்ல முடியாது. பிறகு பார்ப்போம் என்றார்.