April 19, 2024

உரிமைக்காக மடிந்த இளைஞர்களின் பூமியில் களியாட்டங்களுடன் மனம் மாறும் இளைஞர்கள்;

உரிமைக்காக மடிந்த இளைஞர்களின் பூமியில் களியாட்டங்களுடன் மனம் மாறும் இளைஞர்கள்; சலுகைகளை வழங்கி எங்கிருந்தோ வந்தவர்கள் வெல்கிறார்கள்….

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்காக தேர்தல் காலங்களில் எமது கட்சியின் பிரசாரத்துக்காக உழைத்த நண்பர்கள், நலன் விரும்பிகள், எமது கட்சியின் தொண்டர்கள் அனைவரையும் கௌரவிக்கும் முகமாக நடைபெற்று முடிந்த தேர்தலில் எமது கட்சியின் சார்பில் வெற்றியீட்டி பாராளுமன்றம் செல்லவிருக்கும் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் நேற்று சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் சுரேஷ் பிறேமச்சந்திரன், முன்னாள் வட மாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன், சி.சிவகுமார் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அங்கு கலந்து கொண்டு சி.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த தேர்தல் தற்செயலாக ஒரு தீர்மானத்தை தந்து விட்டதாக நினைத்துவிட வேண்டாம். ஏனென்றால் இதில் ஒரு செயற்பாடு உள்ளது. 2013 ஆம் நான் வடமாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் ஜோன் அமரதுங்கவின் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்குபற்றியிருந்தேன். அங்கே ஒரு கருத்தைக் கூறினார்கள் வடமாகாணத்தில் தான் அதிகமான போதைப்பொருட்கள் பாவிக்கப்படுகின்றன, வடமாகாணத்தின் ஊடாகவே போதைப் பொருட்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்படுகின்றன என்று எம்மைத் தாழ்த்தி அவதூறாகப் பேசினார்கள்.

2009 ஆம் ஆண்டு வரையிலே எந்தவிதமான போதைப்பொருள் பாவனையும் இல்லை என்று அவர்களுடைய அறிக்கையே காட்டுகின்றது. ஆனால் 2013 ஆம் ஆண்டிலே போதைப்பொருள் வடமாகாணத்தில் அதிகமாக பாவிக்கப்படுகின்றார்கள் என்றால் ஏதோ காரணம் இருக்க வேண்டும். போர் முடிவடைந்த பின்னர் இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார் உள்ளனர். அப்படி இருக்கையில் போதைப்பொருள் எவ்வாறு இங்கு வருகின்றது. முன்னர் இல்லாத போதைப் பொருட்கள் இவர்கள் இருக்கும் போது எவ்வாறு வருகின்றது என்றால் இவர்களுக்கும் போதைப்பொருள் காரர்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கின்தா என்று கேள்வி எழுப்பிய போது அவர்களால் எதையுமே கூற முடியாமல் இருந்தது.

போர் முடிவடைந்த பின்னர் இன்று வரை இருக்கின்ற அரசாங்கங்கள் இராணுவத்தினரை வைத்திருப்பதற்குக் காரணம் வடக்கு கிழக்கை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் யுத்திகளாக இளைஞர்களை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி, களியாட்ட நிகழ்வுகளில் அவர்களை ஈடுபடுத்தி அவர்களுடைய மனங்களை மாற்றுகின்றார்கள்.

எமது உரிமைக்காக போராடிய இளைஞர்கள் மடிந்த காலம் போய் வெறும் களியாட்ட நிகழ்வுகளிலே எமது இளைஞர்களுடைய மனம் லயிக்கக் கூடியதான சூழலை ஏற்படுத்துகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் அரசாங்கத்தின் கையாட்களாக மாறினார்கள். அது எதற்காக என்றால் வட கிழக்கு மாகாண தமிழ் மக்களினுடைய மனதை மெல்ல மெல்லமாக மாற்றி உரிமைகளை விட்டு சலுகைகளை நோக்கி செல்ல வைப்பதற்கான சதித்திட்டத்தின் விளைவுதான் இந்த தேர்தலில் ஒரு தீர்மானம் மக்களால் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இப்பொழுது இருக்கும் இளைஞர்களுக்கு போரினுடைய வலிகள், துன்பங்கள் தெரியாது. ஏனென்றால் போர் நடைபெற்ற காலத்தில் அவர்கள் சிறுவர்களாக இருந்திருப்பார்கள். இப்பொழுதுதான் வாக்களிக்கும் உரிமையைப் பெற்று இளைஞர்களாக உள்ளனர். அவர்களுக்கு என்ன தேவை களியாட்ட நிகழ்வுகளும் போதைப் பொருள் பாவனை போன்ற தற்காலிக சந்தோசங்களில் இருக்கின்றார்களே தவிர வருங்காலத்திலே தமிழ் மக்களுக்கு என்ன நடைபெறப் போகின்றது, தமிழனின் கலாசாரம், பண்பாடு, மொழி இவை அனைத்தையும் அழிக்க துடிக்கின்றார்கள் போன்றவை பற்றிய எந்த சிந்தனையும் கிடையாது.

இவ்வாறான ஒரு நிலையிலேயே மக்கள் தீர்மானம் தரப்பட்டிருக்கின்றது. ஆகவே, எமது இளைஞர்கள் இதிலிருந்து விடுபட வேண்டுமாக இருந்தால் பலவிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இளைஞர்களுடைய குறிக்கோள்களை மாற்ற வேண்டும். சமூக புரட்சி ஒன்றை ஏற்படுத்த தவறுவோமாக இருந்தால் நாங்கள் அழிந்தவராகிவிடுவோம்.

வெகுவிரைவிலே இந்த நாட்டிலே சர்வதிகாரம் திளைக்கப் போகின்றது. அதற்குரிய சகலவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்குரிய அத்திவாரம் இடப்பட்டு விட்டது. ஆனாலும் எமது உரிமைகளை நாம் கேட்டே தீருவோம். ஆனால் சிலர் நினைக்கின்றார்கள் அதிகார பலம் அவர்களிடம் சென்றதன் பின்னர் கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு நாங்கள் வாயை மூடிக் கொண்டு இருந்தால் என்ன என்ற நினைக்கின்றார்கள்.

சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே, கட்சியின் வெற்றிக்காக உழைத்த அனைவரும் இனிவரும் காலங்களில் மக்களின் எழுச்சிக்காக, புரட்சிக்காக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன் என்றார்.