April 24, 2024

இம்முறை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவு சரியானதா?

இம்முறை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவு சரியானதா?

இம்முறை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவு சரியானதா? இந்தக் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிந்து போனது, சுமந்திரன், சிறிதரன் வெற்றி பெற்றது,

எதிர்பார்க்கப்பட்டது போன்று வடக்கில் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி சோபிக்கத் தவறியது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்தது,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் யாழ்ப்பாணத்தில் பெற்றிருக்கின்ற வாக்குகள், கிழக்கில் அம்பாறையில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது,

திருகோணமலையில் இரா.சம்பந்தனின் வெற்றி என பல காரணங்களை முன்வைத்து தமிழ் மக்கள் எடுத்த முடிவு சரியானதா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

வாக்குகள் ஒவ்வொருவரதும் உரிமை. அந்த வாக்குகள் அளிக்கப்பட்டதற்கான காரணத்தை மதிப்பிடாமல் வாக்களித்த மக்களின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது தவறு.

வாக்காளர்கள் எப்போதும் முதலில் தமது பிரச்சினைகளில் இருந்து தான் முடிவுகளை எடுப்பார்கள். அடுத்ததாகத் தான் பொதுப் பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்துவார்கள்.

ஆயினும் இரண்டையும் சமநிலைப்படுத்தும் ஒரு பொறிமுறை பெரும்பாலான வாக்காளர்களிடம் இருக்கும்.

அதனை அவர்கள் தமது கல்வியறிவு மூலமாகவோ சுற்றுப்புற சூழ்நிலைகளின் மூலமாகவோ பிறரின் அறிவுரைகள் மூலமாகவோ உருவாக்கிக் கொள்வார்கள்.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் 2 ஆசனங்கள் உள்ளிட்ட 6 ஆசனங்களை இழந்திருக்கிறது. இது அவர்களுக்கு முக்கியமான ஒரு பின்னடைவு. ஆனால் இது எதிர்பார்க்கப்படாத பின்னடைவு அல்ல.

காரணம் 2015 தேர்தலை விட இம்முறை கூட்டமைப்புக்கு போட்டி கடுமையாக இருந்தது. அதேவேளை கூட்டமைப்பு அப்போதிருந்ததை விடப் பலவீனப்பட்டுப் போயிருந்தது.

குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரன் உடைத்துக் கொண்டு போன வாக்குகள் பெரும்பாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடையது தான்.

உள்ளூராட்சித் தேர்தலின் போதே கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிவைச் சந்தித்திருந்தது. 2015 பாராளுமன்றத் தேர்தலில் 5,15,963 வாக்குகளைப் பெற்றிருந்த கூட்டமைப்புக்கு 2018 உள்ளூராட்சித் தேர்தலில் 3,37,877 வாக்குகள் தான் கிடைத்தன.

எனவே இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெறும் அதிசயங்கள் நிகழும் என்று எவரும் எதிர்பார்க்கக் கூடிய நிலை இருக்கவில்லை.