April 19, 2024

யாழில் நால்வருக்கு கொரோனா?

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட  பரிசோதனையில் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள் நால்வரும் கடந்த மாதம் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரியவருகின்றது.
அவர்கள் அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக விஷேட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலங்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொற்று கண்டு பிடிக்கப்பட்ட அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே சமயம் வட பகுதியில் பல்வேறு இடங்களிலும் செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று ஒருவருக்கும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் இது விடயம் தொடர்பாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. பொதுமக்கள் தங்களது அன்றாட கடமைகளையும் செயற்பாடுபளையும் தொடர்வதுடன் சுகாதார அமைச்சினால் தொற்று தவிர்த்தல் தொடர்பாக வழங்கப்பட்ட சகல அறிவுறுத்தல்களையும் பின்பற்றி நடந்து கொள்ளுமாறும் யாழ்.போதனாவைத்திய சாலை பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே நேற்று 130 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
தனிமைப்படுத்தல் நிலையம் விடத்தல்பளை -125 பேரிலேயே  நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.