April 25, 2024

இடையில் எழுந்தோடிய ஜனநாயகப்போராளி?

கூட்டமைப்பிற்கு முண்டு கொடுக்க யாழ்.ஊடக அமையத்திற்கு வருகை தந்திருந்த ஜனநாயகப்போராளிகள் அமைப்பின் தற்போதைய தலைவர் கேள்விகளால் திணறி ஒரு கட்டத்தில் ஊடக சந்திப்பை அவசர அவசரமாக முடித்துக்கொண்ட பரிதாபம் இன்று நடந்துள்ளது.

இதனிடையெ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சாதாரண போராளிகள் பிழை விட்டதில்லை. ஆனால் மாத்தையா மற்றும் கருணா போன்ற தளபதிகள்தான் பிழைகள் விட்டார்கள எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக போராளிகள் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் இன்று யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
உங்களை இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் என சம்பந்தர் தெரிவித்தாரே.இப்போது அவருக்கு வெற்றி கிடைக்க போராடுகின்றீர்கள்.இப்போது அவர் நிலைப்பாட்டை மாற்றி விட்டாராவென்ற கேள்விக்கு பதிலளிக்கையில் நாங்கள் இராணுவப் புலனாய்வு பிரிவினர் என பலரும் சொல்கிறார்கள், ஆனால் நாங்கள் நம்பவில்லையென்றுதான் சம்பந்தன் சொன்னார்.
நாங்கள் இராணுவ புலனாய்வாளர்களாக செயற்பட வேண்டிய தேவையில்லை. கைது செய்யப்பட்ட 14,000 பேரையும் இராணுவம் விசாரித்தார்கள். கைதானவர்கள் வழங்காத தகவல்களையா நாங்கள் வழங்கப் போகிறோம்.
புலிகளை பற்றி நாங்கள் என்ன புதிதாக சொல்லப் போகிறோம்? புலிகளை பற்றி எங்களிற்கு தெரியாத விடயங்கள்- அதிக விடயங்கள்- இராணுவத்திற்கு தெரியும்.
ரூபன் விடுதலைப்புலிகளது மூத்த போராளி. அவரது குற்றச்சாட்டுக்கள் பொய்யெனவும் அவர் தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில் ஊடகவியலாளர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்ப அவர் பதற்றமடைந்தார்.
கூட்டமைப்பு சரத்பொன்சேகாவிற்கு வாக்களிக்க சொன்னது பற்றி கேள்வி எழுப்பப்பட தான் அப்போது சிறையிலிருந்ததாக கூறி பத்திரிகையாளர் சந்திப்பினை அவசரமாக முடித்துக்கொண்டார்.