April 18, 2024

முன்னாள் முதலமைச்சருக்கு பீல்ட் பைக் அணி மிரட்டல்?

தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கிய உறுதி மொழியை தாண்டி படையினர் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

முழுக்கறுப்பு சீருடை அணிந்த இராணுவத்தினர் தனது பிரசாரத்தை குழப்பும் வகையிலும் தன்னை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட சம்பவம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார்.
இத்தகைய செயற்பாடுகளினால் தன்னை அச்சப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் அவர் இந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இந்த கடிதத்தின் நகல்கள் பிரதமருக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த செவ்வாய் கிழமை யாழ்ப்பாணம் குருநகரில் இரவு 8 மணியளவில் நான் தேர்தல் பிரச்சார மேடையில் இருந்த போது, முழுக் கறுப்புச் சீருடை அணிந்த 14 இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களில் வண்டிக்கு இருவராக கூட்ட அரங்கிற்குள பெரும் சத்தத்துடன் நுழைந்து அச்சுறுத்தியுள்ளனர். வாகன எஞ்சின்களை அலறவிட்டுத் தொல்லை கொடுத்தனர்.
என் கார் புறப்பட்ட போது 14 ஆட்களுடன் 7 மோட்டார் சைக்கிள்களுடன் என் காரைச் சுற்றிச் சுற்றி வந்தனர். கொஞ்ச நேரம் ஓரத்தில் நின்றுவிட்டு என் கார் செல்லும் பாதையில் குறுக்கிட்டனர்.
இந்த இராணுவத்தினர் எனக்கு எதையாவது உணர்த்த விரும்பினார்களா என்று தெரியவில்லை.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் என்னைப் போன்ற வயதான ஒருவரை மிரளச் செய்து விட மாட்டா என்று போதிலும் மக்களுக்குத் தவறான செய்தியை வழங்கி வாக்களிப்பு நடைமுறையை பாதிக்கக்கூடும்.
இந்த சம்பவம் குறித்துப் புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன். வட மாகாணத்தில் 2020 நாடாளுமன்றத் தேர்தல் இராணுவத்தின் இருப்பினால் பாதிப்பு ஏற்படாமல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும் என நம்புகிறேன் என சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
2009 இற்கு முன்னரான காலப்பகுதியில் குடாநாட்டில் ஆட்கடத்தல்கள் கொலைகளை மோட்டார் சைக்கிள் அணிகளே அரங்கேற்றியது குறிப்பிடத்தக்கது.