April 19, 2024

விசாரணைக்கு முன்னிலையானார் ரிஷாட் பதியுதீன்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசாரணை ஒன்றிற்காக வவுனியா ஈரற்பெரியகுளம் காவல் நிலையத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு முன்னிலையாகியுள்ளார்.

அவரை இன்றையதினம் திங்கட்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்தவாரம் அழைப்பாணை விடுத்திருந்தது.
ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பிலான விவகாரத்தில், வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட், ஆஜராக வேண்டுமென, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த காவல்துறைய பொறுப்பதிகாரி இந்த அழைப்பாணையை விடுத்திருந்தார்.

அவரது தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு காவல்துறைமா அதிபருக்கு தேர்தல் ஆணையாளர் எழுத்துமூலம் அறிவித்திருந்த நிலையிலும், இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, குறித்த விசாரணையை வவுனியாவில் முன்னெடுக்குமாறு ரிசாட் தரப்பு தனது சட்டத்தரணிகளூடாக கோட்டை நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதனை ஆராய்ந்த கோட்டை நீதவான்  ,வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரிவில் இன்று முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பணித்திருந்தார்.
அதற்கமைய இன்றையதினம் காலை 10 மணிக்கு ஈரப்பெரியகுளம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் முன்னிலையாகியுள்ளார்.