März 28, 2024

கொலைகளிற்கு விசாரணை:சுதந்திரக்கட்சி வேட்பாளர் துணிச்சல்!

2006ம் ஆண்டு முதல் யுத்த முடிவு வரையான காலப்பகுதியில் யாழ்.குடாநாட்டில் ;  கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்க விசாரணை குழு அமைக்கப்படவேண்டுமென சிறீலங்கா சுதந்திரகட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளரும், தொழிலதிபருமான வரதராஜசிங்கம் விண்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேசுவது தமிழ்தேசியம் என்ற போதும் அவர்களிடம் நரிகள் போன்று தந்திரம்மிக்கவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சர்வதேச விசாரணை என பேசி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனத்திற்கு துரோகம் இழைத்துள்ளனர். 2001 ஆம் ஆண்டிலிருந்து நமது நரித் தந்திரம் ஆன செயற்பாடுகளினால் தமிழ்தேசிய போராட்டத்தையும் தமிழ் மக்களையும் காட்டிக் கொடுத்து உள்ளனர். அது மட்டுமல்லாது சர்வதேச விசாரணையை கோரி காலங்கடத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கை அரசாங்கத்துடன் பேசியும் தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்.
அதே போன்று இறுதி யுத்தத்தின் போது பல துன்பங்களின் மத்தியில்  சேமித்த மக்களுடைய நகைகள் போரில் காணாமல்போயுள்ளது.அந்த நகைகள் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும் .
இதனை அரசாங்கத்துடன் ஆணித்தரமாகப் பேசி அந்த மக்களுடைய நகைகளை மீண்டும் ஒப்படைப்பதற்கு அல்லது அவற்றுக்கான பணத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தபோது இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர் முதலில் ஜனாதிபதி கோத்தபாயவுடன் பேசியே  தமிழ் மக்கள் தீர்வொன்றை பெறமுடியுமெனவும் தெரிவித்தார்.