März 29, 2024

சீன தூதரக கதவை உடைத்து அதிரடியாக உள்ளே நுழைந்த அமெரிக்க பொலிசார்!

அமெரிக்க அதிபர் உத்தரவின்பேரில் சீன தூதரகம் ஒன்று மூடப்பட்ட நிலையில், அதன் கதவை உடைத்து உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர் அமெரிக்க பொலிசார்.

Houstonஇலுள்ள சீன தூதரகத்தை வெள்ளிக்கிழமையுடன் மூடுமாறு சீனாவிடம் அமெரிக்கா வலியுறுத்தியதைத் தொடர்ந்து, தூதரகம் மூடப்பட்டதோடு, அதில் பணி புரிந்தவர்களும் சுமார் 4 மணியளவில் வெளியேறினர்.

அவர்கள் வெளியேறிய சற்று நேரத்தில் அங்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் அந்த தூதரகத்தின் பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

இதற்கிடையில், தூதரக நடவடிக்கைகளை நிறுத்துமாறு அமெரிக்கா உத்தரவிட்ட சிறிது நேரத்தில், தூதரக ஊழியர்கள் எதையோ போட்டு தீக்கொழுத்திய விவரம் வெளியாகியுள்ளது.

தீயணைப்பு வாகனங்கள் விரைந்துவந்த நிலையிலும், தீயணைப்பு வீரர்கள் தூதரகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லையாம்.

இதற்கிடையில், அந்த சீன தூதரகம், உளவு பார்க்கும் மையமாக செயல்பட்டுவந்ததாக கூறப்படுகிறது.

பல அமெரிக்க அதிகாரிகள், Houstonஇலுள்ள அந்த சீன தூதரகம் விலைமதிப்பற்ற மருத்துவ ஆராய்ச்சிகளை திருடுவதற்காக சீன அரசால் பயன்படுத்தப்பட்டதாகவும், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்துறையில் மூக்கை நுழைக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

அந்த தூதரக அலுவலகம், அமெரிக்காவால் நுழைய முடியாத அளவு இரும்புக்கோட்டை போல் இருந்ததாகவும், பல முக்கிய உளவு வேலைகளை ஒருங்கிணத்து செயல்படுத்தும் தகவல் தொடர்பு மையமாக செயல்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, சீன தூதரகத்தை மூடியுள்ளதோடு நிறுத்தாமல், டிக் டாக் போன்ற சீன மொபைல் ஆப்களை தடை செய்யவும், ஹொங்ஹொங்கில் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டம் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி அலுவலர்களுக்கு தடைகள் விதிக்கவும் திட்டமிட்டு வருகிறது.