April 19, 2024

எம்மை வீதி வீதியாக அலைய விடப் போவதாக கூறியவரும் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுகிறார்- பசில் ராஜபக்ச

புதிய கட்சியை ஆரம்பித்தால், வீதி வீதியாக அலைய விட போவதாக கூறியவர்களும் தற்போது தாமரை மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய கட்சியை ஆரம்பிக்கும் நபர்களை வீதி வீதியாக அலைய விடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்..

எனினும் முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் பொலன்நறுவை மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.

மிகவும் கடினமாக நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றோம். நாம் தற்பொழுது நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ளோம்.

நாங்கள் கட்சியை ஆரம்பித்தால், வீதி வீதியாக அலைய விடப் போவதாக கூறியவரும் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுகிறார். நாங்கள் மிகவும் அன்புடன் அவர்களை வரவேற்கின்றோம் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.