April 20, 2024

அமெரிக்க சீனா முறுகல்! ஹூஸ்டனில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை மூட உத்தரவு!

அமெரிக்காவின் டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை வெள்ளிக்கிழமைக்குள் மூடுமாறு அமெரிக்கா சீனாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அறிவுசார் சொத்துக்கள், தனிப்பட்ட தகவல்களைப்  பாதுகாப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
சீனா எமது இறையாண்மையை மீறுவதையும், எங்கள் மக்களை அச்சுறுத்துவதையும் அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது, அதேபோல் உளவு பார்த்தல், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், அமெரிக்க வேலைகள் திருட்டு மற்றும் பிற மோசமான நடத்தைகளை நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம், தொழில்நுட்பம், மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் சமீபத்திய நடவடிக்கையை சீனா கண்டித்திருந்தது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இதை „இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை நாசப்படுத்தும் ஒரு மூர்க்கத்தனமான மற்றும் நியாயப்படுத்தப்படாத நடவடிக்கை“ என்று கூறினார்.
அமெரிக்கா தனது முடிவை மாற்றியமைக்காவிட்டால் வலுவான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என பற்றி அவர் எச்சரித்தார்.
கொரோனா வைரஸ் தொடங்கிய வூஹான் நகரில் அமெரிக்க துணைத் தூதரகத்தை மூடுவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக பெயரிடப்படாத ஒரு ஆதாரத்தை வைத்து ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
பெய்ஜிங்கில் உள்ள தூதரகத்தைத் தவிர, சீனாவின் பிரதான நிலப்பகுதியில் அமெரிக்கா ஐந்து துணைத் தூதரகங்களைக் கொண்டுள்ளது. அவை ஷாங்காய், குவாங்சோ, செங்டு, வுஹான் மற்றும் ஷென்யாங் ஆகிய இடங்களில் உள்ளன.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே சில காலமாக பதற்றம் அதிகரித்து வருகிறது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் வர்த்தகம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக பெய்ஜிங்குடன் பலமுறை மோதியிருக்கிறது.
ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா விதித்தது. அதற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது.
செவ்வாயன்று, கோவிட் -19 தடுப்பூசிகளை உருவாக்கும் ஆய்வகங்களை குறிவைத்து ஹேக்கர்களுக்கு சீனா நிதியுதவி அளிப்பதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியது.
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனங்களை உளவு பார்த்ததாகவும், மற்ற திருட்டுகளுக்கு அரசு முகவர்களிடமிருந்து உதவி பெற்றதாகவும் கூறப்படும் இரண்டு சீன பிரஜைகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு இரு தரப்பினருக்கும் இடையேயான உறவு சீர் குலைந்து வருகிறது.