April 19, 2024

வங்கிகளில் கடன் பெறும் போது மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும்..பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

வங்கிகளில் கடன் பெறும் போது மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும்..பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

வங்கிகளில் கடன் பெறும் போது மக்கள் சிரமத்திற்குள்ளாகும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (21) காலை கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேசங்கள் சிலவற்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உடுதும்பரயில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய பிரதமர் கருத்து வெளியிடுகையில், வங்கிகளில் கடன் பெற செல்லும் மக்கள் சிரமத்திற்குள்ளாகும் வகையில் விண்ணப்பங்கள் நிரப்புவதற்கு உள்ள முறையை எதிர்வரும் காலங்களில் மாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

2005ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாட்டில் முப்பது வருடங்கள் காணப்பட்ட சிவில் யுத்தத்தை நாங்கள் நிறைவு செய்தோம். அதன் பின்னர் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் நாட்டின் அனைத்து மாகாணத்திற்கும் ஒரே முறையில் அபிவிருத்திகளை ஏற்படுத்தினோம். அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட நெடுஞ்சாலைகள் விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாடசாலைகள் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் ஒரே சம அளவிலான அபிவிருத்திகளை நாடு முழுவதும் மேற்கொண்டோம்.

2015ஆம் ஆண்டின் பின்னர் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கம் அந்த அபிவிருத்திகளை பின்நோக்கி கொண்டு சென்றது. கண்டிக்கு வரும் அதிவேக நெடுஞ்சாலையும் எங்கள் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் கண்டியை மறந்துவிட்டது. எங்கள் புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததனை தொடர்ந்து கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமவில் இருந்து குருநாகல் வரையிலான பகுதிகளில் இதுவரையில் வேலைகள் நிறைவு செய்யப்பட்டு வருகின்றது. வெவ்வேறு உறுப்பினர்களுக்கு அதிவேக நெடுஞ்சாலைகளின் பகுதிகளை வழங்குவதே தாமதத்திற்கு காரணமாகும். எங்கள் அரசாங்கத்தின் கீழ் வெகு விரைவில் கண்டி வரை அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் நடவடிக்கையை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம்.

கடந்த அரசாங்கம் வேலை செய்வதனை நிறுத்தி விட்டு தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அனைவரையும் பழிவாங்கினார்கள். ஆணைக்குழுக்களை அமைத்தார்கள். குற்றச்சாட்டுகள் இன்றி எங்கள் பிள்ளைகளை சிறையில் அடைத்தார்கள். எங்கள் அமைச்சர்கள், உறுப்பினர்கள், உதவிய வர்த்தகர்கள் என அனைவரையும் நிதி குற்ற விசாரணை பிரிவு என விசேட விசாரணை பிரிவை அமைத்து சிறையில் அடைத்தார்கள். அதற்கு பிரதமரால் மாத்திரமே முறைப்பாடு செய்ய முடியும். அந்த முறையில் சட்டத்தை உடைத்தார்கள். சட்டத்தை உடைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்கள். அதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதன் பின்னர் அந்த அரசாங்கத்தின் ஜனாதிபதிக்கும் ,பிரதமருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்தது. அந்த மோதலினால் ஜனாதிபதி என்னை அழைத்து பிரதமர் பதவியை ஏற்குமாறு கூறினார். நான் அதனை ஏற்றேன். அந்த காலப்பகுதியில் சிறிய காலப்பகுதி ஒன்றுக்கே பிரதமர் பதவியை ஏற்க முடியும் என்பது எனக்கு தெரியும். அன்று நாங்கள் எதிர்கட்சியில் இருந்த போது எங்கள் குழுவில் ஐம்பத்து இரண்டு பேர் இருந்த போதிலும் எங்களுக்கு எதிர்கட்சி தலைமைத்துவம் வழங்கப்படவில்லை. 16 ஆசனங்கள் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. எதிர்கட்சியின் பிரதான கொறடா பதவி மக்கள் விடுதலை முன்னணிக்கும் வழங்கப்பட்டது. அது தான் அன்று நாடாளுமன்றம் செயற்பட்ட முறையாகும். அந்த விடயங்களை மேற்கொள்வதற்கு சபாநாயகர் புதிய சட்டத்திட்டங்களை கொண்டு வந்தார். இறுதியாக பிரதமர் பதவியை பெற்றுக் கொண்டு மீண்டும் எதிர்கட்சிக்கு செல்லும் போது எதிர்கட்சி தலைவர் பதவியை பெற்ற முடிந்தது. அதன் பின்னரே புதிய கட்சி ஒன்றில் பிரதேச சபை தேர்தில் போட்டியிட்டு அந்த தேர்தலில் வெற்றி பெற்றோம். எங்கள் கட்சிக்கு மூன்றாயிரம் கணக்கிலான உறுப்பினர்கள் உள்ளனர். பிரதேச சபை தேர்தலில் 71% ஆசனங்களை எங்களால் வெற்றியீட்ட முடிந்தது. ஜனாதிபதி தேர்தலிலும் நாங்கள் தாமரை மொட்டியில் போட்டியிட்டு கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றார்.

பிரதமர் மற்றும் ஜனாதிபதி இரண்டு கட்சிகளில் இருக்கும் போது நாட்டிற்கு சேவைகள் ஒன்றும் நிறைவேற்றப்படாதென்பதனை நாங்கள் பார்த்தோம். அந்த தரப்பினர் சண்டையிடுவதனை மாத்திரமே செய்தார்கள். அதனால் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிக்கு நிச்சயமாக பிரதமர் பதவியும் நாடாளுமன்றமும் காணப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் நாடு ஒன்றில் அபிவிருத்திகள் ஏற்படாது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றால் எங்கள் ஜனாதிபதியின் கொள்கை வேலைத்திட்டங்களை முன்னெடுக்க கூடியவர்களை நாடாளுமன்றத்திற்கு நியமிக்க வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை செய்வதற்காக இந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இம்முறை தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள எங்கள் குழுவினர், கிராமங்கள் குறித்து, பிரதேசங்கள் குறித்து, நாடு குறித்து மாத்திரமின்றி, சர்வதேச அரசியல் தொடர்பிலும் சிறந்த விழிப்புணர்வு கொண்டவர்களாகும். ஐக்கிய தேசிய கட்சி இன்று இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க அவர்களும், டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி ஸ்ரீங்கா சுதந்திர கட்சியை கட்டியெழுப்பினார்கள். அவர்களை தொடர்ந்து சந்திரிக்கா அவர்கள் போன்று நாங்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முன்னோக்கி கொண்டு வந்தோம். பின்னர் எங்களை கட்சியில் இருந்து விலக்கியமையினால் எங்களுக்கு வேறு கட்சியை உருவாக்க நேரிட்டது. நாங்கள் மொட்டினை உருவாக்கி வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம். பெண்கள்களின் எதிர்காலத்தை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கு பொருத்தமான வேலைத்திட்டம் அவசியமாகும். சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு விசேட கடன் முறையை அமைப்பது அவசியமாகும். இன்று கடன் பெற சென்றால் வங்கிகளில் வழங்கும் விண்ணப்பங்களை பார்க்கும் போதே பயம் ஏற்படுகின்றது. வங்கிகளில் கடன் வழங்கும் முறை மாற்றமடைய வேண்டும். அதனை நாங்கள் தினமும் கூறுகின்றோம். வங்கிகளில் கடன் பெற்று ஏதாவது தொழிற்சாலையை ஆரம்பிக்க கூடிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும். அதனால் வங்கிகளுக்கு மத்திய வங்கியின் ஆலோசனை கிடைக்க வேண்டும். இலகு முறை ஒன்றை பின்பற்ற வேண்டும். பெண்களுக்காக விசேட வேலைதிட்டம் ஒன்றையும் கடன் பணம் வழங்கி சுய தொழில் தொழிற்சாலை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்த விடயத்திற்கமைய அவர்களின் வாழ்க்கையை வெற்றிகராக மேற்கொள்ள கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதேபோன்று தொழில் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்போம்.இதற்கு முன்னர் நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் அரச தொழிலில் ஏழு லட்சம் பேர் வரையிலானோரே இருந்தனர்.

நாங்கள் அரசாங்கத்தை ஒப்படைக்கும் போது 15 லட்சம் பேர் வரையில் இருந்தனர். நாங்கள் ஒரே நேரத்தில் அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கினோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பட்டதாரிகள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் தொழில் வழங்குவதாக கூறினார். கூறியதனை போன்றே நாங்கள் தொழில் வழங்கினோர். எனினும் தேர்தல் சட்டத்திற்கமைய அவர்களுக்கு தற்காலிகமாக வீட்டில் இருக்க நேரிட்டுள்ளது. தொழிலை ஏற்றவர்களுக்கு சம்பளமும் கிடைக்கின்றது.

ஒரு லட்சம் தொழில் வழங்கும் வேலைத்திட்டமும் அதே போன்ற வேலைத்திட்டமாகும். முதல் முறையாக ஒரு பேனையில் ஒரு லட்சம் தொழில் வழங்கப்படுகின்றது. பொதுவாக ஆறு வேலைகளாவது செய்திருந்தால் தான் அரசாங்க தொழில் கிடைக்கும். முதல் முறையாக பரீட்சையில் தோல்வியடைந்தவர்களை பார்த்து தொழில் வழங்கப்படுகின்றது.

நாங்கள் மூன்றில் இரண்டு அதிகாரம் கேட்கின்றோம். ஏன் மூன்றில் இரண்டு கேட்கின்றோம். அரசியலமைப்பை மாற்ற வேண்டும் நாட்டிற்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு ஒன்று வேண்டும். நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு பதில் வழங்கும், நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கும் அரசியலமைப்பு ஒன்றை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

பின்னர் கண்டி, தெல்தெனிய நகரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர், தந்தையின் வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அதிகாரம் கோரும் சஜித் பிரேமதாஸவின் தந்தையின் ஆட்சி யுகம் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டார்,

சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கொள்கை தொகுப்புகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை தொகுப்புகளுக்கும் இடையில் ஒற்றுமை ஒன்று உள்ளது. இலங்கை மிக பழைமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்தும் தலைமைத்துவத்தை ஏற்று செயற்பட்ட சஜித் பிரேமதாஸ, நாட்டை பிளவுப்படுத்துவதற்கும் ஒரு போதும் தயங்க மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்.

சஜித் பிரேமதாஸ அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது தந்தையின் வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கே அதிகாரத்தை கேட்கின்றார். ஆர்.பிரேமதாஸ காலம் தொடர்பில் நினைவுப்படுத்தினால் 88, 89 காலப்பகுதியில் காணப்பட்ட கலவர யுகமே எந்த ஒரு நபருக்கும் நினைவுக்கு வரும். பிரேமதாஸ யுகத்தின் கலவரம் காரணமாக கண்டியின் சில கிராமங்கள் படுகொலைகளுக்குட்பட்டது. நாய் – பூனையேனும் மீதம் வைக்கவில்லை. அந்த கலவரங்கள் தொடர்பில் இந்த பிரதேச மக்கள் என்ற ரீதியில் உங்களுக்கு புதிதாக ஒன்றும் கூற தேவையில்லை. அந்த கலவரத்தினால் முழு நாட்டிலும் 60 ஆயிரத்திற்கும் அதிக இளைஞர், யுவதிகள் கொல்லப்பட்டனர்.

1988ஆம் ஆண்டில் பேராதனை பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர்கள் மாத்திரம் 22 பேர் கொல்லப்பட்டனர். கண்டி மஹவத்தை படுகொலை சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 157 ஆகும். அதில் 129 கொலை பிரேமதாஸ அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டது. 28 பேரை மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறையாளர்கள் கொலை செய்தனர். 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரேமதாஸ அரசாங்கம், கண்டி டீ.எஸ்.சேனாநாயக்க மாவத்தையில் மேல் பகுதிக்கு செல்லும் பழைய மாத்தளை வீதியில் இளைஞர், யுவதிகள் பலர் எரித்து கொலை செய்யப்பட்டனர்.

பிரேமதாஸ யுகத்தில் கண்டி மாவட்டத்தின் கடுகன்னாவ, ரன்தெனிகல, கண்டி, சில்வெஸ்டர் வித்தியாலயம், அஸ்கிரி பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லங்கள், அங்கும்புர குண்டசாலை, கட்டுகஸ்தோட்டை தெல்வத்தை சித்திரவதை கூடங்கள் உட்பட பல பாரிய எண்ணிக்கையிலான சித்திரவதை கூடங்கள் இருந்தமை எங்களுக்கு நினைவில் உள்ளது.

இடைக்கிடையே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பேராதனை பாலத்தில் இருந்து மகாவலி கங்கைக்கு இழுத்து வீசப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 200க்கும் அதிகம். கடுகன்னாவ நகரத்தில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட 14 – 15 வயதுடைய சிறுமிகளின் சாம்பல்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று அது தொடர்பில் முழு உலகினதும் அவதானம் செலுத்தப்பட்டது. அன்று காணப்பட்ட அரசாங்கம் அந்த சாம்பல்கள் எவ்வாறு நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதென தேடிய போதிலும் அந்த சிறுமிகளை யார் கொலை செய்தார்கள் என தேடவில்லை. இதனால் இன்று மீண்டும் பிரேமதாஸ யுகம் ஒன்று ஏற்படுத்த மக்கள் அச்சப்படுகின்றார்கள் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தை, ஆனந்த அளுத்கமகே உட்பட இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கண்டி மாவட்டத்தில் பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.