April 20, 2024

பிரான்ஸில் பதற்றம்! தேவாலயம் மீது தாக்குதல் முயற்சி!! துணிகரமாகத் தடுத்த இளைஞன்!!!

 தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடத்த முற்பட்ட நபர் ஒருவரை, மகிழுந்து சாரதி ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். இச்சம்பவம் Blanc-Mesnil நகரில் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள இரவு விடுதி ஒன்றில், சனிக்கிழமை இரவு பிறந்தநாள் விருந்து நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் விருந்து நிறைவுக்கு வந்தது.  விடுதி மூடப்படும் வேளையில், இச்சம்பவம் இடம்பெற்றது.

32 வயதுடைய நபர் ஒருவர் கையில் கூரான வாள் போன்ற கத்தி ஒன்றையும், கைத்துப்பாக்கி ஒன்றையும் எடுத்துக்கொண்டு Blanc-Mesnil தேவாலயம் நோக்கி சென்றுள்ளார்.

அவர் சத்தமாக `அல்லா ஹூ அக்பர்` என கோஷமிட்டவாறு தாக்குதல் மேற்கொள்ளும் முனைப்போடு சென்றுள்ளார். அதன் போது, மகிழுந்தில் பயணித்த 38 வயதுடைய மகிழுந்து சாரதி ஒருவர் குறித்த ஆயுததாரியின் மீது மகிழுந்தால் மோதி இடித்து தள்ளியுள்ளார்.

பினனர், கீழே இறங்கி, அவரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த ஆயுதங்களை பறித்துள்ளார். பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு, குறித்த ஆயுததாரி கைது செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணைகளை பொபினி நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில், பிறந்தநாள் விருந்து விழா இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போதும் குறித்த ஆயுததாரி விடுதிக்குள் நுழைய முற்பட்டுள்ளார்.

தாக்குதலை தடுத்து நிறுத்திய நபர், இரவு விடுதி ஒன்றின் மெய் பாதுகாவலர் என அறிய முடிகிறது.