April 19, 2024

நக்குண்டு நாவிழந்தது வீடு… வயதுக்கு வராதவர்களின் கட்சி சைக்கிள்; தம்பி பிரபாகரனின் எண்ணப்படி எமது கட்சி!

தம்பி பிரபாகரன் அன்று தொடங்கிய கூட்டமைப்பு போய் இன்று அது தமிழ் மக்கள் தேசிய கூட்டணியாக மாறியுள்ளதை நீங்கள் ஏற்று எமக்கு வாக்களிப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். தேர்தலில்களமிறங்கியுள்ள சுயேட்சைக் கட்சிகள் யாரோ சிலரின் அரசியல் சூழ்ச்சிகளின் பிரதிபலிப்பு. அவற்றையும் கூட்டமைப்பு உள்ளடங்கலாக அரசாங்கங்களுக்கு முண்டு கொடுக்கும் கட்சிகளையும் நீக்கினால் இரண்டே இரண்டு கட்சிகள் தான் மிஞ்சும். அவற்றில் ஒன்று எங்களுடையது. மற்றையது வயது வராத, முதிர்ச்சி பெறாத, வாதம் ஒன்றே வாழ்க்கை என்று வாதாடும் சைக்கிள் கட்சி என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.

நேற்று (19) உடுவிலில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுகாறும் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்தவர்கள் எல்லாம் இப்பொழுது மீன் சின்னத்திற்கு மாறி வருகின்றார்கள். காரணம் வீட்டார் கொள்கை தவறிவிட்டார்கள். அவர்கள் மனதில் பொதுநல சிந்தனைகள் குறைந்து இப்பொழுது சுயநல சிந்தனைகளே மேலோங்கி நிற்கின்றன. நேரத்திற்கு நேரம் அவர்களின் பேச்சுக்கள் மாறிவருகின்றன. சந்தர்ப்பவாதிகளாக வீட்டார் இப்பொழுது வலம் வருகின்றார்கள்.
கூட்டமைப்பினதும் கூட்டணியினதும் அடிப்படை அரசியல் சிந்தனைகள் ஒரே விதமாக இருப்பதாகத் தென்பட்டாலும் இதுவரையில் வீட்டார் அவை பற்றி நடந்து கொண்ட முறை எமக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றது. அவர்கள் தமது விஞ்ஞாபனங்களில் தமிழர் உரிமைகள் பற்றிப் பேசினாலும் அவர்களின் நடைமுறை நடத்தைகள் சலுகை அரசியலுக்கும் ஏமாற்றுகளுக்கும் விலை போவதாக அமைந்துள்ளன.

“நக்குண்டார் நாவிழந்தார்” என்ற பழமொழி கேட்டிருப்பீர்கள். இன்னொருவரிடம் பல்லிளித்து சலுகைகளைப் பெற்றுக் கொண்டால் எம்மால் அவர் செய்யும் வேறு பிழையான காரியங்கள் சம்பந்தமாக மாற்று நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் போய்விடும். நாவிழந்து விடுவோம். மௌனிகள் ஆகிவிடுவோம்.

சலுகைகள் தருபவர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் திட்டமிட்டே உதவிகளை எங்களுக்குத் தருகின்றார்கள். உதாரணம் ஒன்றைக் கூறுகின்றேன். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்த போது ஒரு நாடு அவர்களிடம் கடன் வேண்டுமா என்று கேட்டது. மிகக் குறைந்த வட்டியில் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் தருவோம் என்று அவர்கள் கூற இலங்கை பாரிய கடன் வாங்கியது. அப்பணத்தில் பல மாட மாளிகைகள் கட்டினார்கள். கூட கோபுரங்கள் கட்டினார்கள். ஏதோ தங்கள் பணத்தில் கட்டுவது போல் ஜம்பமுடன் இராங்கியுடன் பொருளாதார விருத்தியை நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. ஆனால் நடந்தது என்ன? கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை வந்ததும் நாட்டின் சில பகுதிகளை குறித்த வெளிநாட்டுக்கு இப்போது அடகுவைத்துள்ளார்கள். இந்த வெளிநாடு தென்கிழக்கு ஆசியா, ஆபிரிக்க நாடுகள் யாவற்றிலும் இவ்வாறு தான் நாடு பிடித்து வருகின்றது.

நாம் சலுகைகளைப் பெற விழையும் போது வருங்காலத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இல்லையேல் நாம் ஒரு பொறிக்குள் அகப்பட்டுக் கொள்வோம். இப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு பொறிக்குள் அகப்பட்டு தத்தளிக்கின்றது. பொறிக்குள் அகப்பட்ட அது மரண பயத்தில் இருந்து கொண்டு தான் இப்போது தேர்தலில் வாக்குகள் கேட்கின்றது.

அவர்களை இனியும் நீங்கள் மேலும் கஷ்டப்பட வைக்க வேண்டியதில்லை. வீட்டிலிருந்து மீனுக்கு மாறுங்கள் என்று கேட்கவே நாம் இன்று இங்கு வந்துள்ளோம். நாம் ஒன்றை மறக்கக்கூடாது. நாம் யாவருமே 2013 அளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களாக இருந்தோம். பின் என்ன நடந்தது?

எப்போது தனிமனிதர்கள் தங்கள் முடிவே மக்கள் முடிவு, கட்சியின் முடிவு என்று தம்பட்டம் அடிக்கத் தொடங்கினார்களோ அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை நிலை சறுக்கத் தொடங்கிவிட்டது. 14வது லூயி மன்னனிடம் அவனுடைய நாடு பற்றிக் கேட்ட போது அவன் விடையிறுத்தானாம் இவ்வாறு – “நாடா? நாடு என்பது நானே!” என்று கூறினானாம். திருமிரும் அகந்தையுந்தான் இவ்வாறு 14வது லூயியைப் பேச வைத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் அவ்வாறான சிந்தனைகள் கொண்ட சிலர் இருக்கின்றார்கள். தான்தோன்றித்தனமாக கொள்கைகளை மாற்றி இப்போது எமது கொள்கைகள் இது தான் என்று ஒருதலைப் பட்சமாகக் கூறக் கூடியவர்கள் இவர்கள்.

கொள்கைகளை மாற்றலாம். ஆனால் அதற்கு முன்னர் மக்களிடம் அனுசரணை பெற வேண்டும். அவ்வாறு அனுசரணை பெறாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் எனப்படுபவர்கள் தன்னிச்சையாக வடகிழக்கு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களில் மண் அள்ளிப் போட்டதாலேயே இன்று அக்கட்சி ஆட்டம் கண்டுள்ளது. ஐந்து கட்சிகளுடன் வலம் வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது 2½ க் கட்சிகளுடன் கூனிக்குறுகி வாக்குக் கேட்கின்றது. இக் கட்சியில் இப்போது தமிழ் அரசுக் கட்சி, புளொட் மற்றும் ரெலோவில் அரைவாசியும் இருக்கின்றன.

எம்மைப் பற்றி “இக் கட்சி விரைவில் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்” என்று கூறிய சில அதிகம் படித்தவர்களின் கூற்றைப் பொய்யாக்கும் விதத்தில் எமது கட்சி தனிக்கட்சி என்ற ஸ்தானத்தில் இருந்து ஐந்து கட்சிக் கூட்டணியாக மாறியுள்ளது. அதாவது தற்போது கூட்டமைப்பு இரண்டரை கட்சிகள் என்றால் எமது கூட்டணி 5 கட்சிகள் கொண்டு வலம் வருகின்றது. நாம் இரட்டிப்பாக வளர்ந்து விட்டோம். அவர்கள் அரைவாசியாய்த் தேய்ந்து விட்டார்கள்.

தம்பி பிரபாகரன் அன்று தொடங்கிய கூட்டமைப்பு போய் இன்று அது கூட்டணியாக மாறியுள்ளதை நீங்கள் ஏற்று எமக்கு ஆகஸ்ட் ஐந்தாம் திகதி தவறாது வாக்களிப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். வாக்களிப்பது எப்படி என்றும் கூறிவிடுகின்றேன். இம் முறை வாக்குப் பதிவுச்சீட்டு மிக நீளமானது. 33 கட்சிகளின் பெயர்கள் அதில் அடங்குகின்றன. அவற்றுள் 14 சுயேட்சைக் கட்சிகள். இந்த சுயேட்சைக் கட்சிகள் யாரோ சிலரின் அரசியல் சூழ்ச்சிகளின் பிரதிபலிப்பு. அவற்றையும் கூட்டமைப்பு உள்ளடங்கலாக அரசாங்கங்களுக்கு முண்டு கொடுக்கும் கட்சிகளையும் நீக்கினால் இரண்டே இரண்டு கட்சிகள் தான் மிஞ்சும். அவற்றில் ஒன்று எங்களுடையது. மற்றையது வயது வராத, முதிர்ச்சி பெறாத, வாதம் ஒன்றே வாழ்க்கை என்று வாதாடும் சைக்கிள் கட்சி. அதற்குக் காலம் இருக்கின்றது. அதைத் தவிர்த்து அந்த வாக்குச் சீட்டில் மீன் சின்னத்தைத் தேர்ந்தெடுங்கள். சுமார் பத்தாவதாக மீன் சின்னம் இருக்கும். அதற்கு எதிராக ஒரு புள்ளடி போடுங்கள்.

இப்பொழுது தேசியக் கூட்டணிக்கு வாக்களித்து விட்டீர்கள். அடுத்து அந்த வாக்குச்சீட்டின் அடியில் இருக்கும் 1-10 வரையிலான இலக்கங்களுக்கு வாருங்கள். நாம் உங்களுக்குக் கைப் பிரசுரங்கள் தந்துள்ளோம். அவற்றில் எமது 10 வேட்பாளர்களின் படங்கள், பெயர்கள், இலக்கங்கள் யாவும் தரப்பட்டுள்ளன. அவற்றுள் மூன்று பேர்களைத் தேர்ந்தெடுத்து அந்த இலக்கங்களின் மேல் புள்ளடி போடுங்கள். எனக்கு வாக்களிக்க விரும்பினால் இலக்கம் 6ன் மேல் புள்ளடி இடுங்கள் என்றார்.