April 16, 2024

ஆபத்தான நாடுகள் பட்டியலில் இலங்கை…!

ஸ்ரீலங்கா அரசாங்கம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை மறைத்து வருவதுடன் தேவையான அளவுக்கு பரிசோதனைகளை நடத்துவதில்லை எனவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் எமது நாடும் இடம்பிடித்துள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தாதியர் தொழிற்சங்க செயற்பாட்டாளருமான சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் மற்றும் இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி வெளியிடும் கருத்துக்களில் முரண்பாடுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

ஸ்ரீலங்கா அரசாங்கம் சில பிரதேசங்களை திருட்டுத்தனமாக மூடி விட்டு கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையை மறைக்க முயற்சித்து வருகிறது.

கொரோனா ஒழிக்கப்படுமாயின் அதனை நாங்கள் மிகவும் விரும்புவோம். இதனை ஒழிக்க முடியுமா? என்ற விடயம் சம்பந்தமாக பிரச்சினை உள்ளது.

ஒரு புறம் அரசாங்கம் பிரதேசங்களை மூடுகிறது. தேவையான அளவுக்கு பரிசோதனைகளை செய்வதில்லை. உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைகளை பின்பற்றுவதில்லை. சுகாதார அமைச்சின் ஆலோசனைகளையும் பின்பற்றுதில்லை. அரசியல்வாதிகள் தமக்கு தேவையான வகையில் தான் செயற்பட்டு வருகின்றனர்.

சில கட்டுப்பாடுகளை அரசியல்வாதிகள் தாம் விரும்பியது போல் தளர்த்தி வருவதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

இது செய்யக் கூடாது காரியம். மருந்தை கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர இன்னும் ஒரு வருடமாவது செல்லும்.

எனினும் விரைவில் ஊசி மருந்தை கண்டுபிடிக்க முடியும் என உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கூறியிருந்தார். எதற்காக அப்படி கூறுகின்றார் என்பது எனக்கு தெரியவில்லை. எனினும் ஒரு வருடம் செல்லும் என உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் கூறுகிறார்.

இதேவேளை உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகள் பட்டியலில் இலங்கை இல்லை. எனினும் கொரோனாவை கட்டுப்படுத்திய சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை இருப்பதாக அதன் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கூறுகிறார். இதிலும் முரண்பாடு உள்ளது.

பிரித்தானியா பயண கட்டுப்பாடுகளை நீக்கிய நாடுகள் பட்டியலில் ஸ்ரீலங்கா இல்லை. அடுத்ததாக அமெரிக்க ஆபத்தான நாடுகள் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் ஸ்ரீலங்கா உள்ளது. இதிலும் பரஸ்பர முரண்பாடுகள் உள்ளன.

யார் இந்த முரண்பாட்டை தீர்ப்பது என்ற பிரச்சினை இருக்கின்றது. தயவு செய்து இதனை தெளிவுப்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்கிறோம். இதனை தெளிவுப்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோருகிறோம். இலங்கை சரியாக எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.