April 19, 2024

இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டோம்

தமிழ் மக்களின் தீர்வு சம்பந்தமாக நாம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

மாற்றமடைந்த அரசியல் பிரச்சினைகள் காரணமாக இதனை நாம் எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இழுத்தடிப்புக்களையே கொண்டிருந்தன எனவும் தெரிவித்தார்.

சம்பூர் பகுதியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

தமிழ் மக்கள் சுபீட்சமாக வாழ வேண்டும். சம்பூர் பிரதேசம் அபிவிருத்தி அடைய வேண்டும்.

எமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த வாரம் வெளியிட்டு வைக்கப்படும். அதில் எமது அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு விடயத்தில் நாம் இறுதி கட்டத்தில் நிற்கிறோம். நாம் இதில் உறுதியாக நிற்க வேண்டும். எதிர்வருகின்ற தேர்தலில் நாம் அதிக ஆசனங்களை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் திருகோணமலை மாவட்டத்தில் வாக்குகள் சிதறா வண்ணம் தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.