April 25, 2024

விமான நிலையம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

விமான பயணங்களை மீண்டும் ஆரம்பிக்கும் வரை, கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்களில் மூன்றில் இரண்டு வீதமானவர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் விமான நிலையத்திற்குள் பரவுவதை தடுப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் தற்போது கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக பணிக்கு அழைக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவினால் விமான நிலையத்திற்கு பெரிய பிரச்சினை ஏற்படும்.

இதனால், இதற்கு முன்னர் அரசாங்கம் அறிவித்திருந்தமைக்கு அமைய ஊழியர்களில் மூன்றில் இரண்டு வீதமானவர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்க மீண்டும் தீர்மானித்துள்ளோம். 15ஆம் திகதி முதல் சாதாரண பயணிகள் விமானங்கள் வருவதில்லை. விமானங்கள் வராமல் ஊழியர்களை பணிக்கு அழைப்பதில் பயனில்லை. இதனால், பயணிகள் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் வரை குறைவான ஊழியர்களை சேவைக்கு அழைக்க தீர்மானித்துள்ளோம் எனவும் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார். விமான சேவைகள் நிறுவனத்தில் 4 ஆயிரத்து 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.