April 24, 2024

கூட்டமைப்பே பலம்:சித்தார்த்தன்!

தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் பலமே தமிழ் மக்களின் ஒட்டுமொத்தப் பலம் எனத் தெரிவித்துள்ள அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அந்தப் பலத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஏகோபித்த ஆதரவை கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.
தமிழர் தாயகத்தின் பல்வேறு கட்சிகளும் பல சுயேட்சைக் குழுக்களும் இத் தேர்தலில் போட்டியிடுகின்றன. அவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்கே களமிறங்கயிருக்கின்றன. தமிழ் மக்களுக்காக செயற்பட்டு வருகின்ற கட்சியாக கூட்டமைப்பு இருக்கின்றது. அந்தக் கட்சி தொடர்ந்தும் மக்களுக்காகவே செயற்படும்.
ஆனால் எமது கட்சி மீது குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்களை முன்வைத்து அதனூடாக தமக்கான ஆதரவை பெறுவதற்கு பலரும் முயற்சிக்கின்றனர். ஆனால் மக்களின் ஆணை பெற்ற கட்சியாக எமது கட்சியே இருக்கின்றது. இந்தத் தேர்தலிலும் எமது கட்சிக்கே மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்குவார்கள்.
ஆகவே எம்மை மீண்டும் பலமான அமைப்பாக தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புவார்கள் என்ற நம்பிக்கை எங்களிற்கு இருக்கின்றது. அதனை விட வேறு பல கட்சிகள் போட்டியிட்டாலும் அவர்கள் பலமாக இருக்க முடியாது.
தனிப் பெரும் கட்சியாக கூட்டமைப்பே திகழும். ஆகையினால் மீண்டும் மீண்டும் அந்தக் கட்சிக்கே அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறான முழுமையான ஆதரவை மக்கள் வழங்வார்கள் என்ற நம்பிக்கை எங்களிற்கு இருக்கின்றது.
ஆகையினால் நாங்கள் மீண்டும் மீண்டும் மக்களிடம் கேட்பது என்னவெனில் இங்கு பல கட்சிகள் இருந்தாலும் பலமான கட்சியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இத் தேர்தலில் மீண்டும் ஏகோபித்த ஆதரவை வழங்கி தனிப் பெரும் கட்சியாக பலமான அமைப்பாக தெரிவு செய்ய வேண்டும். ஆக கூட்டமைப்பின் பலமே தமிழ் மக்களின் பலம் என்ற அடிப்படையில் மக்களின் ஆதரவு அமைய வேண்டும் என்றார்.