April 25, 2024

தமிழர்களை எவ்வளவு காலம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.., உடனயாக ஒரு தீர்வை வழங்குங்கள்!

அதிகாரத்தைக் கோரும் தமிழ் அரசியல்வாதிகளோ, கொழும்பு வந்துசென்று சொகுசாக வாழ்கின்றனர். சாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர். அவர்கள் பக்கம் நின்றே இந்தப் பிரச்சினைக்கான தீர்வை காணவேண்டும்.

இதற்காக நாமும் குரல் எழுப்புவோம். இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதற்காக எத்தனை வருடங்கள் பேச்சுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன? இதனால் சாதாரண தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றனர்.

அன்று முதல் இன்றுவரை தேர்தல் காலங்களில் 13வது திருத்தச் சட்டம் பற்றிக் பேசுவது வழமையாகிவிட்டது.

இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை நாம் முன்மொழிகின்றோம்.

இந்த நாட்டை இதுவரையில் சிங்கள தலைவர்களே நிர்வகித்துள்ளனர்.

ஆனாலும், அவர்களுடன் கூட்டணி வைத்து தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வை காண்பதற்கான வாய்ப்பை தமிழ்த் தலைவர்கள் தவறவிட்டு வந்தனர். எனவே இந்த நிலைமைக்கு சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூற வேண்டும்.

அதேவேளை 13, 13 பிளஸ் என்பதெல்லாம் முக்கியம் அல்ல. தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கான பேச்சுக்களை ஆரம்பித்து இதோ, இந்தத் தீர்வைதான் தம்மால் வழங்க முடியும் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். நிர்வாகத்தை வழங்குவதா, அதிகாரங்களைப் பகிர்வதா என்பது பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.