April 23, 2024

எங்களுக்கு ஆதரவாக மோடி இருக்கின்றார்! சம்பந்தன்

எமக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“சர்வதேச சமூகம் எம் பின்னால் நிற்கின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முழுமையாக எங்கள் பின்னால் நிற்கின்றார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இரண்டு நாட்களில் இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

அவர் ஜனாதிபதியை சந்தித்து பேசினார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீதியான, சமத்துவமான, கௌரவத்துடன் கூடிய தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என கலந்துரையாடினார்.

அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு சென்றபோது இந்த செய்தி அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது” என அவர் மேலும் கூறியுள்ளார்.