April 20, 2024

சாதி,மத பிளவுகளை கூட்டமைப்பு தூண்டவேண்டாம்!

சாதி, மத ரீதியாக தமிழ் மக்களிடையில் பிரிவினைகளை உண்டாக்கி வாக்குப் பெறும் முயற்சியை தமிழ்தேசிய கூட்டமைப்பு உடனடியாக கைவிடவேண்டும். என தமிழர் விடுதலை கூட்டணியின் உப தலைவரும், அக்கட்சியின் வேட்பாளருமான ச.அரவிந்தன் கோரியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் போதாமையாக உள்ளதாக நாம் குற்றம் சாட்டி வரும் நிலையில் , தற்போது இருக்கும் கொஞ்ச அதிகாரங்களை கூட பறிக்க முயல்கின்றனர்.
தற்கு தமிழர் விடுதலை கூட்டணி தனது எதிர்ப்பை தொடர்ந்தும் வெளியிடும்.இந்த நிலையில் தமிழ் மக்களை கூறு கூறாக பிரித்து தமிழ்மக்களை சீரழிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது முயல்கின்றது. தாம் வாக்குகளை பெற சாதி , மத ரீதியாக மக்களை பிரித்தாள்கின்றனர்.
சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை பிரித்து கூறு போட்டு சீரழிக்கும் திட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணை போகின்றது.தாம் வாக்குகளை பெறுவதற்காக சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் கருத்துகளை மக்கள் மத்தியில் விதைத்து வாக்கு பெற முயலும் செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறாக தமிழ் மக்களின் ஒற்றுமையை சீரழிக்கும் செயற்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம் எனவும் ச.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.