März 28, 2024

சுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
நேற்றைய கூட்டமே எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் குற்றஞ்சாட்டுவதாக அமைந்திருந்த நிலையில் இரா.சம்பந்தன் தனது அடுத்த நகர்வை ஆரம்பித்துள்ளார்.
இதுவரை தனக்கு பின்னராக எம்.ஏ.சுமந்திரன் என நகர்வுகளை முன்னெடுத்த இரா.சம்பந்தனை தந்தை செல்வநாயகத்தின் பேரனை முன்னிலைப்படுத்தி நகர்வுகளை முன்னெடுக்க இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்க தொடங்கியுள்ளது.
திருகோணமலையில் தங்கியுள்ள தந்தை செல்வாவின் பேரன் சந்திரகாசன் இளங்கோவையே முன்னிலைப்படுத்த டெல்லி அழுத்தங்களை பிரயோகிக்க முற்பட்டுள்ளது.
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இளங்கோ முற்பட்ட போதும் செல்வநாயகத்தின் பேரன் தேர்தலில் தோல்வியடைவதை விரும்பவில்லையென இரா.சம்பந்தன் நாசுக்காக காய் வெட்டிக்கொண்டார்.
போதிய முன்னாயத்தமின்றி இளங்கோவை களமிறக்க இரா.சம்பந்தன் விரும்பவில்லையென கூறப்படுகின்ற போதும் எம்.ஏ.சுமந்திரனின் அழுத்தங்களாலேயே காய் வெட்டிக்கொண்டதாக தெரியவருகின்றது.
தற்போதைய அரசியல் போக்கில் டெல்லி எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில்  இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் நேற்றைய சந்திப்பில் இது குறித்து பேசியுள்ளனர்.
சுமந்திரன் விவகாரத்தில் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி, அதனால் கூட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றி விலாவாரியாக பேசப்பட்டு;ள்ளது.
ஏம்.ஏ.சுமந்திரனின் அரசியல் தமக்கு ஆப்படிக்குமென மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் மற்றும் ஏனைய தமிழரசு மூத்த தலைவர்கள் நம்புகின்றனர்.
எனினும் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிற்கு இந்தியா அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி தெளிவுபடுத்தியுள்ளதால் தந்தை செல்வாவின் பேரனின் வருகை தொடர்பில் அவர்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.