April 25, 2024

யாழிலிருந்து போக்குவரத்துக்கள் ஆரம்பம்?

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் வெளி மாவட்டங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய நீர்கொழும்பு, அம்பாறை, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு இன்று (26) முதல் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு இன்றைய தினம் தனியார் போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றன. எனினும் வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவில்லை.
இது தொடர்பாக மத்திய பேருந்து நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தனராஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
‘இன்று அதிகாலையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்புக்கான சேவை நீர்கொழும்பு வரைக்கும் இடம்பெறவுள்ளது.
எனினும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த சேவையின்படி, ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேருந்து சேவை இடம்பெறவுள்ளது. காலப்போக்கில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
எனினும் பேருந்து சேவையினை பெற்றுக்கொள்ளும் பொதுமக்கள் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தங்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.