April 23, 2024

சாதி, சர்ச்சை…`கொம்பன்’ இயக்குநருடன் மீண்டும் இணையும் கார்த்தி!

கார்த்தி - சூர்யா

கார்த்தி – சூர்யா

`கடைக்குட்டி சிங்கம்‘ படத்தைத் தொடர்ந்து, சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் இரண்டாவது படம் இது.

நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் ஜோதிகா, சூர்யா ஆகியோர் நடிக்கும் படங்களை மட்டும் தயாரித்து வந்தது. இந்த இருவர் இல்லாமல் அந்த நிறுவனம் தயாரித்த படங்கள் இரண்டுதான். ஒன்று பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த `கடைக்குட்டி சிங்கம்‘, இன்னொன்று விஜயகுமார் இயக்கி நடித்த `உறியடி 2′. அதில் `கடைக்குட்டி சிங்கம்‘ கொடுத்தது மிரட்டலான வெற்றி. சூர்யா தயாரித்த படங்களில் அதிக வசூலைப் பெற்றதும் இந்தப் படம்தான். இந்தப் படத்துக்குப் பிறகு, மீண்டும் தன் அண்ணன் சூர்யா தயாரிப்பில் உருவாகும் படமொன்றில் நடிக்கவிருக்கிறார் கார்த்தி. ஒவ்வொரு படத்துக்கும் வெவ்வேறு இயக்குநர்களுடன் இணைவது கார்த்தியின் வழக்கம். முதல்முறையாகத் தன்னுடைய கரியரில் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார். இதைத்தொடர்ந்துதான் இந்த இளம் இயக்குநருடனும் இரண்டாவது முறையாக இணைகிறார்.

இயக்குநர் முத்தையா

இயக்குநர் முத்தையா

`பொன்னியன் செல்வன்‘ படத்துக்கு அடுத்து கார்த்தி நடிக்கப்போகும் படத்தின் இயக்குநர் முத்தையா. இவர் ஏற்கெனவே கார்த்திக்கு `கொம்பன்‘ எனும் ஹிட் படத்தைக் கொடுத்தவர். ஆனால், அதற்கு அடுத்து `மருது‘, `கொடிவீரன்‘, `தேவராட்டம்‘ என கொஞ்சம் சாதி, சர்ச்சைப் படங்களில் சிக்கினார். இப்போது மீண்டும் கார்த்தியுடன் பெரிய படம் இயக்குகிறார். இந்த லாக் டெளனில் கார்த்தி படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளில்தான் தீவிரமாக இருக்கிறாராம் முத்தையா. ஆனால், படம் எப்போது தொடங்கும் என்பது புரியாத புதிராக இருக்கிறது. காரணம், `பொன்னியின் செல்வன்‘ படத்தை கார்த்தி எப்போது முடிக்கிறாரோ அப்போதுதான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குமாம். `கொம்பன்‘ படத்தைப்போலவே கிராமத்துப் பின்னணியில்தான் உருவாகிறதாம். இது தவிர, `ரெமோ‘ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகும் `சுல்தான்‘ படத்தின் படப்பிடிப்பு இன்னும் பத்து நாள்கள் இருக்கிறதாம். தவிர, `அடங்கமறு‘ இயக்குநர் கார்த்திக் தங்கவேல், அருண்ராஜா ஆகியோரும் கார்த்தியை இயக்கும் பட்டியலில் காத்திருக்கின்றனர்.