März 29, 2024

தலைவர் பிரபாகரனுக்கு பயிற்ச்சி முகாம் இடம் கொடுக்க முன்வந்த சிங்கம்பட்டி ஜமீன்

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு, பயிற்ச்சி முகாமுக்காக தனது சிங்கம் பட்டி ஜமீனில் உள்ள இடத்தை கொடுக்க முன்வந்தார் மன்னர் டிஎன்எஸ் முருகதாஸ் தீர்த்தபதி என்று தனது நினைவுகளை அதிர்வு இணையத்திற்கு பகிர்ந்துள்ளார் கே.எஸ் ராதாகிருஷ்ணன் அவர்கள். 1983களில் ஈழப் பிரச்சனை கடுமையாக இருந்த கால கட்டங்களில், இந்திரா காந்தி அம்மையார், தமிழ் நாட்டில் போராட்ட இயக்கங்களுக்கு பயிற்ச்சி கொடுக்க ஒரு முகாமை அமைக்கவேண்டும் என்று கூற.

ஐயா நெடுமாறன் அவர்களின் பரிந்துரையின் பேரில் சில இடங்கள் பார்கப்பட்டது. இதனை அடுத்து சிங்கம்பட்டி எஸ்டேட்டுக்கு உட்பட்ட பாபநாசம் மலைப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் நடத்த நல்ல இடம் என்று நெடுமாறன் ஐயாவால் பரிந்துரை செய்யப்பட்டது. தலைவர் பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் மற்றும் நான் ஆகிய மூவரும் சென்று பார்த்தோம். ஆனால் அந்த இடம் உகந்தது அல்ல என்ற முடிவுக்கு வந்தோம்.

இருந்தாலும் என்ன ? எங்கள் வீட்டில் உணவு அருந்திச் செல்லுங்கள் என்று கூறி, எங்களுக்கு விருந்து படைத்தார் சிங்கம் பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி ஐயா. அவர் தமிழீழம் மீதும், தலைவர் பிரபாகரன் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததாக ராதாகிஷ்ணன் அவர்கள் தெரிவித்தார். கி,பி 1100ம் ஆண்டில் உருவான இந்த சிங்கம்பட்டி ஜமீன் தமிழ் நாட்டில் இருந்த 72 பாளையங்களில் ஒன்றாக இருந்தது. காலம் காலமாக இருந்த மன்னர் மற்றும் ஜமீன் முறைகள் இந்தியாவில் அகற்றப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மன்னர் ஆட்சி முற்றாகவே ஒழிக்கப்பட்டது. அதற்கு சில காலங்களுக்கு முன்னர் 3 வயதில் மன்னராக முடி சூட்டிக் கொண்டவர் தான், சிங்கப்பட்டி ஜமீன் ஐயா முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள். இதனால் அவர் அப்படியே மன்னராகவே இருந்துவிட்டார். இறுதிவரை அவரது சிங்கம்பட்டி ஜமீன் மீது இந்திய அரசு எதனையும் செய்யவில்லை. வயது முதிர்வு காரணமாக அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.