முல்லைதீவு முன்னிற்கு வருகின்றது?

முல்லைத்தீவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது. கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 2 கடற்படையினருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் ஆறு கடற்படையினருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருந்தது.

எந்த வித கட்டுப்பாடுமின்றி முல்லைதீவு கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கையினை சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மொத்தமாக பத்து பேரிற்கு தொற்று ஏற்பட்டுள்ளதனை முல்லைதீவு ஆதார வைத்தியசாலை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் முல்லைத்தீவுக்கு மூழ்கியிருக்க கடந்த திங்கட்கிழமையும் 15 பேரூந்து வண்டிகளில் கொரோனா தொற்றுக்கான வாய்ப்புள்ள கடற்படையினர் மற்றும் கடற்படையினரின் குடும்பத்தினர்கள் அழைத்துவரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
அவ்வாறு அழைத்து வரப்பட்ட கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களை சேர்ந்த 500பேரில் பகுதி பகுதியாக நடத்தப்பட்டுவரும்  ஆய்விலேயே கொரொனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கேப்பாபிலவு – பிலக்குடியிருப்பு, வீதிக்கரையோரமாக 2017ல் விமானப்படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய சிறிய கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தனிமைப்படுத்தல் நிலையங்கள், இராணுவ முகாம்களுக்குள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன என்று அரசு மக்களுக்கு சொல்லியுள்ள நிலையில், இராணுவத்தினரால் மக்களிடம் கையளிக்கப்பட்ட விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் தேவையுள்ளவர்களை தங்கவைப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டிருந்தமை தெரிந்ததே.