März 28, 2024

வணங்கா மண்ணின் அடங்காப்பற்று பதுங்கு குளிக்குள் ஒளித்தது – நிலவன்

ஈழ விடுதலைப் போரின் காரணமாக 2009ம் ஆண்டு வன்னியில் கொடூர யுத்தத்தில் சிக்கிய, அப்பாவித் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில்
கொன்றொழிக்கப்பட்ட போரின் பேரவலப்படும் இரத்த உறவுகள் நிர்க்கதியற்று நிற்க யுத்தம் உக்கிரமடைந்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளோ நாளுக்கு நாள்சுருங்கிக் கொண்டிருந்தன. விடுதலைப்   புலிகள் அழிப்பதாக எண்ணி தமிழர்களை படுகொலை செய்து ஒரு மனித இனப் படுகொலையினை  நடத்திட பௌத்த சிங்கள அரசிற்கு நேரடியாகவும் பக்கபலமாக நின்ற ஆசியநாடுகளும் ,   சர்வதேச வல்லரசு நாடுகளும் வழங்கிய உதவியும் ஒத்தாசையுமே அதிகம் என்றால்   மிகையில்லை.

வணங்காமண் திட்டம் பற்றித் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் (கஸ்ரோ)  தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரெஜி ஆகியோருக்குப் புலம்பெயர் நாட்டில் இருந்து வன்னியில் தங்கியிருந்த  எம் மக்களுக்கு  மருந்துகள்  மற்றும் உணவுப் பொருட்களும், மருத்துவர்கள் (தமிழர்கள் மற்றும் வெள்ளையினத்தவர்கள்), மேலைத்தேய ஊடகவியலாளர்கள் வெள்ளையினத்தவர்கள்), மேலைத்தேய அரசியல்வாதிகள், மனிதநேய செயற்பாட்டாளர்களையும் ஏற்றி அவர்களை வன்னிக்கு கொண்டுவருமாறு வன்னியில் இருந்து 2008 ஆம் ஆண்டு இறுதிக் காலப் பகுதியில் கோரப்பட்டது.

வன்னியில் யுத்தம் தீவிரமடையத் தொடங்கிட முள்ளிக்குளம்  இருந்தும் முள்ளிவாய்க்காலை நோக்கி  தமிழீழவிடுதலைப் புலிகள் பின்வாங்கத் தொடங்கிய பொழுது தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், அவர்களுக்கு வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) ரெஜி ஆகியோரினால் வணங்கா மண் கப்பலில் குறைந்தது பதினைந்து மருத்துவர்கள் (தமிழர்கள் மற்றும் வெள்ளையினத்தவர்கள்), ஐந்து அல்லது ஆறு மேலைத்தேய ஊடகவியலாளர்கள் (முற்றிலும் வெள்ளையினத்தவர்கள்), மேலைத்தேய அரசியல்வாதிகள், மனிதநேயசெயற்பாட்டாளர்கள் உட்பட நிவாரணப் பொருட்களுடன் 250 பேர் கொண்ட குழுவுடன் புலம்பெயர் நாடுகளில் இருந்து குழு வன்னிக்கு அனுப்புவதற்கான திட்டம்  தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டது.

வணங்காமண் கப்பல் வெளிக்கிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என வன்னிக்கு தகவல் அறிவிக்கப்பட்ட நிலையில் நடந்ததோ வேறுகதை. மருத்துவர் அருட்குமார் அவர்களைத் தவிர வேறு எந்த தமிழ் மருத்துவர்களும் கப்பல் மூலம் வன்னிக்கு வருவதற்கு   விரும்பவில்லை. வெள்ளையின மருத்துவர்களின் நிலையும் அதேதான். இதே கதைதான் ஊடகவியலாளர்களின் விடயத்திலும் நடந்தது. வெள்ளையின ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல. எந்தவொரு தமிழ் ஊடகவியலாளரும் கப்பல் மூலம் வன்னிக்கு வருவதற்கு  விரும்பவில்லை ஒருபுறமிருக்க… இத்  திட்டத்திற்குப் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே கிடைத்த வரவேற்பு உடனே வணங்கா மண் திட்டம்பற்றித் புலத்து மக்களுக்கு  அறிவிக்கப்பட்டதோ 10.03.2009 அன்று. ஆனால் 11.05.2009 வரை, அதாவது இரண்டு மாதங்களுக்கு மேலாக, வன்னியில் இருந்து அணுகப்பட்ட விடயத்திற்கு  எந்தவொரு தமிழ் ஊடகவியலாளரும் வன்னி செல்வதற்கு விரும்பவில்லை. இதற்குள் 07.05.2009 அன்று பிரான்சில் இருந்து கப்டன் அலி என்ற கப்பல் (வணங்காமண் என்ற திட்டப் பெயருடன்) வன்னி நோக்கிப் புறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் இலண்டனில் வசித்து வந்த ஐ.பி.சி தமிழ் வானொலியின் தலைமை செய்தியாசிரியர்  11.05.2009 அன்று மதியம் அணுகப்பட, அவரும் தயக்கமின்றி வன்னி செல்ல இணங்கினார். அதுதான் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டகதையாக நேரடியாக இலண்டனில் இருந்து கப்பல் ஏறாமல், கப்பல் ஏறுவதற்காக எகிப்து செல்வதற்கு அவர் தள்ளப்பட்டார்  என்பதை சங்கதி 24 செய்திகளினுடாக அறிய முடிகின்றது.

சிறிலங்கா அரசு உணவு மற்றும் மருந்தை கேடயமாகப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மீது மிலேச்சத்தனமாக மிகமோசமான இனப்படுகொலைகளை அரங்கேற்றிய நிலையிலும், சர்வதேசம் தமிழ் மக்களுக்கான மனிதாபிமான எந்தவொரு உதவிகளை வழங்காத நிலையிலும், தமிழ் மக்களை உலகமே கை விட்டுள்ள நிலையிலும் வன்னிக்கு வருவதாக கூறப்பட்ட வணங்காமண் கப்பல் இன்று வரும் நாளை வரும்  எமைக் காத்திட கப்பலில்  உணவும், மருந்தும் சர்வதேச உறவுகளும் வருவார்கள்  என நித்தமும் நாட்கள் நகர்ந்திட முள்ளிவாய்கள் பதுங்குழிகளுக்குள் வணங்காமண்  பற்றிப் பேசிக்கொண்டிருந்த காலம்  வணங்காமண்  கப்பல் பற்றிய  பரப்புரைகள் புலத்தில் தீவிரமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இது பற்றி அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் அவர்களிடம் தெரிவிக்க, அவர் உடனே பிரான்சில் தங்கியிருந்த ஸ்கன்டனேவிய நாட்டைவதிவிடமாகக் கொண்ட தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவரை அணுகி, அவர் ஊடாக பிரதீப் என்ற இன்னொரு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரின்  உதவியுடன், கப்டன் அலி என்ற மத்திய கிழக்காசிய கப்பலை வாடகைக்கு அமர்த்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக வணங்கா மண் மனிதாபிமான திட்டம் 10.03.2009 அன்று மேர்சி மிசன் என்ற பெயரில் மருத்துவர் அருட்குமார் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

உலகமே கைவிட்ட  உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற பரிவுடன்  உறவுகளை நோக்கி ஒருபயணம் என்ற தலைப்பில் தமிழில் “வணங்காமண்” எனவும் ஆங்கிலத்தில் “கருணைக் கடன்” என்ற “ஈரூடக”பெயருடன் சிரியாவில் பதிவு செய்யப்பட்ட “கப்டன் அலி” என்ற 1600 மெற்றிக்தொன் இடைகொண்ட ‚வணங்காமண்‘ (IMO: 6619920) எண்ணைக் கொண்ட கப்பல்  வாஞ்சையுடன் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, ஜேர்மனி என்ற பெருவரிசை ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் “அக்ட் நௌவ்” அமைப்பின் ஏற்பாட்டில் நாடு நாடாகக்சென்று புலம்பெயர் சமூகத் தொண்டர்களால் உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் மற்றும் அத்திய அவசியப் பொருட்களுடன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விசேட தேவை உடையவர்கள் உதவி உப கரணங்கள் வழங்குவதற்கென் நிவாரணப் பொருள்களுடன் பிரித்தானியாவிலிருந்து  2009- மாச் 31ஆம் நாள் புறப்பட்ட கப்பல், பிரான்சின் ஃபோஸ்-சுர்-மெரில் இருந்து 884 மெற்றிக்தொன் பொருள்களுடன்  ‚மெர்சி மிஷன்டு வன்னியின்‘ 2 வது பாதையில் ஈழம் நோக்கி தன் பயணத்தை தொடரத் திட்டமிடப்பட்டபோதும் பல காரணங்களினால் புறப்படவில்லை என  புலத்து உறவுகளினூடாக அறியமுடிந்தது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தில்  பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு  நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு 30.03.2009 அன்று பிரித்தானியக் கடற்கரையிலிருந்து நிவாரணக் கப்பல் புறப்படுவதற்கு இருந்தபோது , கடந்த காலங்களிலும் இவ்வாறான நிவாரணக் கப்பல்களை விடுதலைப் புலிகள் தமக்குப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டிய இலங்கை அரசாங்கம், குறிப்பிட்ட கப்பலைத் தடுப்பதற்குத் தொடர்ச்சியாக பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த  அதேநேரம் நிவாரணக் கப்பல் பிரித்தானிய கடற்கரையிலிருந்து புறப்படவில்லையென அர்ஜுன் எதிர்வீரசிங்கம் கூறியுள்ளார்.

கப்பலை அனுமதிப்பதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. எனினும், முன்னனுமதியின்றி எந்தவொரு கப்பலும் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது எனவும் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என இலங்கை கடற்படை எச்சரித்து   தொடர்ச்சியாக வலியுறுத்தியதைத் தொடர்ந்தே, பிரித்தானிய அரசாங்கம் அனுமதி மறுத்திருப்பதாகத் செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சீறி வரும் எறிகணைகள் புலிகள் யார், பெண்கள் யார், குழந்தைகள் முதியவர்கள் யார் என்ற பேதமின்றி அனைவரையும் சமமாக நடத்தி யாரையும் பேதமில்லாமல் சிதைத்து சின்னாபின்னமாக்கி வந்த நிலையில்  இத்திட்டத்திற்கு  ஒன்றரை மில்லியன் பவுண்கள் வரை பணம் மக்களுடமிருந்து சேகரிக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கும் நிலையில் பெறுமதியான உடைகள், மருந்துகள், உணவு வகைகள் போன்றவையும் புலம் பெயர் நாடுகளில் இருந்து மக்களால் வழங்கப்பட்டது எனவும் வணங்கா மண் திட்டத்திற்கு நிதியும் சேகரிக்கப்பட்டது. இவை ஒருபுறம் இருக்க வணங்கா மண் கப்பலை உரிய நேரத்தில் வன்னிக்கு அனுப்பி வைக்காத நிலை காணப்பட்டது மட்டும் உண்மை.

20/04/2009 அன்று பிரித்தானியாவில் உள்ள இப்ஸ்விச் எனும் துறைமுகத்தில் இருந்து கிளம்பிய ஹகப்ப ஃபேகம்ப் எனும் துறைமுகத்தில் வைத்து கப்பலில் உள்ள அனைத்துப் பொருட்களையும் தரையிறக்கியது. இறக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தரைமார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டு பலத்த இழுபறிக்குப் பின்னர் ஒருவாறு கப்பலை வாடகைக்கு அனுப்புவதற்கான பல புலத்து உறவுகளின் முயற்சியில் மீண்டும் மே மாதத்தின் தொடக்கத்தில் பிரான்சின் தென் பகுதியிலுள்ள பெஸ்-சூர்-மேர்க்கு ( Fos-Sur-Mer) எனும் துறைமுகத்தில் தரித்துபொருட்களை ஏற்றிக்கொண்டு 07.05.2009 அன்று பிரான்சில் இருந்து ஒருவாறாக தனது வரலாற்றுப் பயணத்தை ‚Captain Ali‘ எனப் பெயர் பொறிக்கப்பபட்ட கடற்கலன் தனது பயணத்தை ஆரம்பித்தது.

கப்டன் அலி ஏறத்தாள இரண்டு மாதங்களின் பின்னர், அதுவும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்களில்  பிரான்சில் இருந்து எகிப்து வழியாக வன்னி நோக்கிப் தனது பயணத்தை ஆரம்பித்திட புலம்பெயர் தமிழ் மக்கள்பாச உணர் வோடும், மனித நேயத்துடனும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களால் வணங்கா மண் திட்டம் பற்றி புலம்பெயர்  தேசத்திலும் வன்னியிலும், பேசு பொருளாக  கப்பல் வருகின்றது என அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வணங்காமண் கப்பலில் பயணம் செய்தவர்கள் 15 நபர்கள் ஆகும். கப்பலில் (2002-2005) புலிகள்-அரசு யுத்தநிறுத்தகாலத்தில் இலங்கை கண்காணிப்பு குழுவில் (An ex-Sri Lanka Monitoring Mission (SLMM) கடமையாற்றியவரும் மேற்படி ஐஸ்லாண்டைச் சேர்ந்த கிறிஸ்டியா கூமஸ்டாவும் உட்பட 2 ஏஜிப் நாட்டவர்கள் இவர்களில் ஒருவர் கப்டன் அலிஹ கப்பலின் கப்டனான 2னெ அலைவலகர் மற்றவர் சமயல் பணியாளர்மிகுதி கப்ரன் தொடக்கம்  மிகுதியாக 11பேரும் சிரியா நாட்டவர்கள். பிரான்சில் இருந்து எகிப்து வரை தமிழ்ப் பொறியியலாளர் ஒருவரும் ,எகிப்து இருந்து கப்பலில் ஏறுவதற்கு 2 பேர் காத்திருந்தார்கள் இதில் ஒருவர் பிரித்தானியாவையும் மற்றவர் நோர்வே நாட்டைச்  சேர்ந்த  தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள், வைத்திய பணியாளர்கள், மனிதாபிமான தொண்டூழியர்கள் ஆகியோருடன் புறப்பட்டு சுயாஸ் கால்வாய் 3 பகல் வேலைகளும் 2இரவும் தங்கியிருந்த  பயணத்தின் பின்னர்  அவர்கள் அங்கிருந்து  தமது பயணத்தை இடைநிறுத்தினார்கள். எனவும் இணையத்தள செய்மதி வசதிகள்  கப்பலில் இருந்தமையால் வலைப்பதிவு, புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள் என தினசரி இருதடவை தமது கணனிகளின் ஊடாக பதிவேற்றம் செய்யப்பட்டது என வல்லை மண்ணை பிறப்பிடமாகவும்
மனிதாபிமான உதவிகளைத்தாங்கி சுமார் 884 தொன் உணவு, மருந்துப்பொருட்களை ஏற்றிக்கொண்டு பலதடைகளையும் தாண்டி புறப்பட்ட இக்கலம்  சுயஸ் கால்வாய் பகுதியைத் தாண்டி பயணித்துக் கொண்டிருந்தவேளை தன்னுடன் பயணம் செய்த சிறிலங்காவின் போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவில் பணியாற்றிய திரு.கிறிஸ்ரியன் (An ex-Sri Lanka Monitoring Mission (SLMM) விடுதலைப் புலிகளிடம் இருந்தும் அரசிடமும் இருந்தும் மின்னஞ்சல்கள் வந்தவண்ணம் இருந்தது. இதில் வன்னியில் இருந்த வந்த செய்தியில் யுத்தம் உக்கிரமடைந்துவருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் அவர்  கூறுகையில் முல்லைத்தீவு போனால் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்படுவது, பயணத்தின் போது இறப்பு நிகழ்ந்தால் ஏற்றுக் கொள்வதற்கும் தயாராகத்தான் பயணத்தை  மேற் கொண்டதாகவ தமிழ் தேசியச்செயற்பாட்டாளர் திரு உதயணன் கூறினார்.

29 நாட்கள் பயணத்தில், வணங்காமண் 12   கடல் மையில்  வேகத்தில் செல்லக் கூடிய கப்பல் சராசரி 4-9 கடல் மையில்வேகத்தில் நாடுகளின் சர்வதேசக் கடல் கரையோரமாகத் தான் பயணம் செய்தார்கள் என்றும் 17 நாள்பயணங்களின் பின்னர் ஈழத்தில் இருந்து முல்லைக் கடல் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்றதகவல் கிடைத்தது எனவும் 29 நாள் 04-06-2009 இலங்கைக் கடல் எல்லைக்கு சென்றதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் 07-05-2009ல் அங்கிருந்து புறப்பட்ட ‚வணங்கா மண்‘ 04-06-2009 அன்று காலை கொழும்பிலிருந்து 160 கடல்மைல்கள் தொலைவில் இலங்கை கடற்படையால்  4 டோறாப் படகுகள் மற்றும் 1 சிறிய கப்பலும் பின்தொடந்தாது  தம்மை  கைப்பற்றி கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சிறிலங்க அரசிடம் இருந்து வன்னி அகதிகளுக்கு விநியோகிக்க கொழும்பு பேரின வாத சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. கொழும்பு கடற்பரப்பரப்பில் வைத்து  7நாட்கள் 21 பேர் மாறி மாறி வந்து விசாரணைகளைமேற் கொண்டார்கள். அதன் பின்னர் கப்பல் இலங்கைக் கடற் பிராந்தியத்துக்கு வெளியே செல்லும்படி இலங்கை அதிகாரிகளினால் பணிக்கப்பட்டது என திரு உதயணன் கூறினார்.

இயற்கை அனர்த்தங்களின் போதும் சரி, மனிதனால் தோற்றுவிக்கப்படும் செயற்கை அழிவுகளின் போதும் சரி, தேச, இன, மதம் பாராது, பாகுபாடு காட் டாமல் நிர்க்கதிக்கு ஆளாகி அந்தரிக்கும் மக்களுக்கு மனிதாபிமான இதயத்துடன் உதவுவது மனிதனுக் குள்ள இயற்கையான இயல்பு. அதுவே மனிதத்துவ மும் விசேட குணாம்சமும் ஆகும். அதனைச் செய்யத் தயங்குபவர்கள் மனிதர்கள் என்ற  வகுப்புக்குள் அடக் கப்பட முடியாதவர்கள். ஏனெனில், ஐந்தறிவு ஜீவன்கள் கூட அடுத்த ஜீவன் துடிப்பதை பொறுக்கமுடி யாது அவலக்குரல் எழுப்பி மற்றவற்றை அழைக்கும் இயல்பு கொண்டவை. நீண்ட நெடுந்தூரத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட உதவிப் பொருள்களை ஏற்றுக்கொண்டு அரசாங்கமே அதனை அகதிகளுக்கு விநியோகித்திருக்கலாம்.

வெளிநாட்டு அரசாங்கங்களிடமும் ஐ.நா.போன்றசர்வதேச அமைப்புக்களிடமும் நிதிக்கும் நிவாரணத் துக்கும் கையேந்தும், உதவிகளை எதிர்பார்க்கும் அரசு, புலம்பெயர் தமிழர்கள் அனுப்பிய பொருள்களை கப்பலுடன் திருப்பி அனுப்பியதை எந்த வகை மனித சமூக இயல்புக்குள் அடக்குவது என்பதனை தமிழர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இலங்கையில்  போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக எம்.வி. கப்டன் அலி என்று பெயரிடப்பட்ட வணங்காமண் கப்பலில் நிவாரணப் பொருட்களுடன் இலங்கை அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பி விட்ட காரணத்தினால் அருகில் இந்தியக் கடற் பரப்பில் நுழைந்த அந்தக் கப்பல் அப்போது சென்னைத் துறைமுகத்துக்கு வெளியே 18 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் நங்கூரமிட்டு அந்தரித்து நின்றது ஈழத் தமிழர் நலன் கருதிப் புறப்பட்ட கப்பல் என்று கருதியோ, என்னவோ இக்கப்பலையும் தீண்டத் தகாத தரப்புப் போன்று கருதி அதை சென்னைத் துறைமுகத்துக்குள் அனுமதிக்க இந்திய அதிகார வர்க்கம் அந்தவேளையில் மறுத்துவிட்டது.

‚மனிதம்‘ அறக்கட்டளை செயல் இயக்குனர் அக்னி சுப்பிரமணியம் வணங்காமன் தொடர்பாக  கனிமொழியின் மற்றும் ‚முதல்வரின் உதவியாளரான சண்முகநாதனிடம் உதவுவதற்காகவந்தவர்களே இப்போது, உதவி நாட வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கும் விஷயத்தைச் சொல்லிட  வேதனையுடன்  அவர்களுக்கு உதவஅனைத்து முயற்சிகளையும் எடுக்கிறேன் என கனிமொழி வாக்குறுதி வழங்கியிருந்தார்.

இலங்கைகியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பல் 2009-06-12ஆம் தேதி இந்தியக் கடல் எல்லைக்குள் வந்தது. சென்னை துறைமுகத்துக்குள் கப்பலைக்கொண்டுவர துறைமுக அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் துறைமுகத்தில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் இக்கப்பல் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. அரசியல் கட்சிகள் மற்றும் மனிதநேய அமைப்புகள் கண்டனக்குரல் எழுப்பியபிறகே அந்த கப்பலில் இருப்பவர்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் குடி நீரை துறைமுக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அக்கப்பலில் உள்ள பொருட்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதி கிடைத்துவிடும் என்று சட்டப்பேரவையில் மறைந்த முன்னால் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருனாநிதி  நம்பிக்கையோடு வாக்குறுதியளித்தார். ஆனால் அனுமதி கிடைப்பதில் பல தாமதங்கள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கப்பலில் உள்ள பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு சென்று இறக்க அனுமதிக்க வேண்டும். அல்லது சென்னை துறைமுகத்தில் இந்தப் பொருட்களை இறக்கிவிட்டு கப்பலை திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி மனிதம் அறக்கட்டளை செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியம் புதுதில்லியில் செஞ்சிலுவைச் சங்க (இந்திய பிரிவு) தலைமைச் செயலாளர் அகர்வாலைச் சந்தித்து மனு அளித்தார். இந்த விசயத்தில் செஞ்சிலுவைச் சங்கம் தலையிட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கப்பலில் சிக்கித் தவிப்பவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அக்னி சுப்பிரமணியம் கேட்டுக்கெண்டார்.

செஞ்சிலுவைச் சங்க உதவியோடு வெளியுறவுத்துறை, கப்பல் போக்குவரத்துத்துறை பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் உயரதிகாரிகளைச் சந்தித்து, இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப் போவதாகவும் அவர் கூறினார். இதனிடையே வணங்காமண் கப்பலை ஆய்வு செய்த தமிழக உளவுத்துறையினர் சில நாட்களுக்கு முன்பு மனிதம் அறக்கட்டளையின் நிருவாகி ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். பின்னர் அவரை கமுக்க இடத்தில் அடைத்து வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சித்திரவதை செய்துள்ளனர் என்று மனிதம் அறக்கட்டளையில் செயலாற்றி வரும் ஒருவர் கூறினார்.

சென்னை துறைமுகத்திலிருந்து 10 கடல் மைல் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வணங்காமண் கப்பல் ஓரிரு நாட்களில் சென்னை துறை முகத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட நிலையில் அதற்குத் தேவையான ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் நடைபெற்றதாகவும் வணங்காமண் கப்பலுக்குச் சொந்தமான இம்பீரியல் ஷிப்பிங் நிறுவத்தின் சென்னை அதிகாரி கிருட்டினமூர்த்தி தெரிவித்துள்ளார். இப்பணிகள் முடிவடைந்து வணங்காமண் கப்பல் சென்னை துறைமுகம் திரும்ப வாய்பிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தமையும்  குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், காங்கிரஸ் பிரமுகர் கோபண்ணா மூலமாக மத்திய கப்பல் துறை அமைச்சரான ஜி.கே.வாசனுக்கும் வணங்கா மண் ஊழியர்களின் நிலைமை விவரமாகச் சொல்லப்பட்டிருதது
கப்பல் ஊழியர்கள் அல்லாடுவது பற்றி அப்போதுதான் அமைச்சர ஜி.கே.வாசனின் கவனத்துக்கு வந்தது. உடனடியாக அவர்களுக்கு அனைத்துவித உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார் ஜி.கே.வாசன். அதனால் கப்பல் ஊழியர்கள் கவலைப்படவேண்டியதில்லை எனச் சொன்னார் கோபண்ணா. ஜி.கே.வாசன், கனிமொழி ஆகியோர் முயற்சி எடுத்ததன் பலனாக அடுத்த நாள் காலையிலேயே துறைமுக அதிகாரிகள் துறை முகத்திற்கள் கப்பலை உள்வாங்கினார்கள் என  அக்னி சுப்பிரமணியம்; கூறினார்.

தண்ணீர், உணவுப் பொருட்கள், மருந்துகள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இதற்கிடையில், இலண்டனில் இருந்து நம்மைத் தொடர்புகொண்ட தமிழர்கள் சிலர், ‚கப்பல் கடலில் நிற்கும் ஒவ்வொரு நாளும் பல லட்சரூபாய் செலவாகிக் கொண்டிருக்கிறது. கப்பலில் இருக்கும் நிவாரணப் பொருட்களை இலங்கையிலோ தமிழகத்திலோ இறக்க அனுமதி வழங்கினால்தான், உலகத் தமிழர்களின் ஒருமித்த முயற்சிக்கு உரிய பலன்கிடைக்கும். அதோடு, கப்பலிலிருக்கும் ஊழியர்கள் பலருக்கும் உடல்நிலை சரியில்லாததால், அவர்களைவிமானம் மூலமாக சொந்த நாடுகளுக்கு அனுப்பவும் தமிழக அரசு உதவ வேண்டும், துகுறித்து தமிழகத்தின் பப்ளிக் செக்ரெட்டரியான ஜோதிஜெகராஜனுக்கு கப்பல் உரிமையாளர் மூலமாகவே ஃபேக்ஸ் புலம் பெயர் தமிழர்கள் தமிழக அரசு அனுப்பி இருப்பாகவும் தமிழக அரசு உடனடியாக உதவ வேண்டும் என்று  அவர்கள் கூறியிருந்தார்கள்.

‚வணங்கா மண்‘ ஏற்பாட்டுக் குழுவினர், நிவாரணப்பொருட்களை ஏற்றி வந்திருக்கும் கப்பலால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை. அப்படியே இந்தியக் கப்பற்படைக்கு சந்தேகம் வந்திருந்தால், அவர்கள் தாராளமாக கப்பலில் சோதனை நடத்தி இருக்கலாம். அதைச் செய்யாமல், உதவி வழங்க வந்தவர்கள் மீதே சந்தேகத்தைக் கிளப்புவது எந்த விதத்தில்நியாயம்? நிவாரணப் பொருளை ஏற்காவிட்டாலும், கப்பலில் அல்லாடும் ஊழியர்களை விமானத்தில் அனுப்பவாவது அரசு மனது வைக்க வேண்டும் என வேதனையோடு தமது கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.
இன் நிலையில் இந்தியாக் கடல் 21 நாட்கள் வணங்காமண் கப்பல் கடலில் இருந்த நிலையில் ஈழத் தமிழர்விவகாரத்தை மையமாக வைத்துத் தமது அரசியல் பகடைக்காய் உருட்டல்விளையாட்டை முன்னெடுத்த  தமிழக முதல்வர்  கலைஞர் கருணாநிதி தமது கைப்பட ஒரு கடிதம் இது தொடர்பாக எழுதி, தமது மாநில  அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க. சார்பில் மத்திய அமைச்சராக விருக்கும்     ஆ. ராசா ஆகியோர் மூலம் இந்திய வெளியுற வுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் நேரடியாகக் கையளிக்கச் செய்திருந்தார். தமிழக முதல்வரின் கோரிக்கைப்படி இந்தக் கப்பலில் வந்த பொருள்களை இறக்கி, வன்னியில் இடம்பெயர்ந்த இடைத் தங்கல் முகாமில் உள்ள மக்களுக்கு அவற்றை வழங்கச் செய்யத் தாம் நடவ டிக்கை எடுப்பார் என இந்தியவெளிவிவகார அமைச்சர் கூறியிருந்தார்.

தமிழக முதல்வர் இந்திய அரசை கேட்டுக் கொண்டதற்கிணங்கி, சிறீலங்காவின் உயர்மட்ட குழு இந்தியா வந்தபோது உடன்பாடு ஏற்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாய் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதல்வரும் இந்திய அரசிற்கு இரு முறை கடிதம் எழுதியும் வணங்காமண் நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்ததாகவும்  அக்கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாய் இந்திய பிரதமரும், தமிழக முதல்வருக்கு நிவாரணப் பொருட்களை சிறீலங்கா செஞ்சிலுவை சங்கம் எடுத்துக் கொண்டுள்ளதாயும், அப்பொருட்கள் தமிழ் மக்களுக்கு விரைவில் விநியோகிக்க சிறீலங்கா அரசு பார்த்துகொள்ளும் என அக் கடிதம் எழுதியிருந்தார்.

‚கப்டன் அலி‘ என்ற வணங்காமண் கப்பலில் அனுப்பப்பட்ட உதவிப் பொருட்கள், நிவாரணப் பொருட்கள் பல இன்னல்கலுக்கு நடுவில் தமிழக  அரசின் அழுத்தங்கள் காரணமாய் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கப்பலில் உள்ள பொருட்கள் இறக்கப்பட்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டு ‚கொலராடோ‘ என்ற சரக்குக் கப்பலில் 03-07-2009 வெள்ளிக் கிழமை சென்னையில் இருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இது குறித்து, ‚மனிதம்‘ தொண்டு நிறுவன செயல் இயக்குனர் அக்னி சுப்பிரமணியம் கூறுகையில் ஐரோப்பிய  மக்களால் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் தமிழர்களை சென்று சேரக்கூடாது என்ற நோக்கில் இலங்கை அரசு செயல்பட்டது. இப்போது எந்த முறையான காரணமும் சொல்லாமல் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளது. அவை முறையாக தமிழர்களை சென்று சேராது. நிவாரணப் பொருள்கள் வீணாகுமானால் அதற்கான பொறுப்பை இலங்கை செஞ்சிலுவைச் சங்கமே ஏற்க வேண்டும். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இந்த நிவாரணப் பொருள்கள் இலங்கைத் தமிழர்களுக்கு சென்று சேர குரல் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

27 பெரிய பெட்டகங்களில் 884 தென் வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது முதல் பல இடையூறுகளை சந்தித்து வந்திருக்கிறது. முதலில், சோதனை என்ற பெயரிலும், பின்னர்துறைமுக கட்டணம் என்ற பெயரிலும், வரிக்காகவும் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்ட நிலையில், கொள்கலன்களில் உள்ள பொருட்கள் பாவனைக்கு உகந்தவையாக என்பதை சுகாதார அமைச்சு, தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், அணுசக்தி அதிகார சபை ஆகியன பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க வேண்டும். என இலங்கை அரசு தெரிவித்தது.

முள்வேலிக்கு பின் உள்ள தமிழர்களுக்கு இப்பொருட்களை விநியோகிக்க சிறீலங்கா செஞ்சிலுவை சங்கம் முடிவெடுத்து, அதற்கான பணிகளில் நிவாரணப் பொருட்கள் கொழும்பு அடைந்ததிலிருந்து செய்து வந்தது. இந்நிலையில் சிறீலங்கா செஞ்சிலுவைசங்கத்தின் துணை இயக்குநர் சுரேன் பெரீஸ் ‚டெய்லி மிரர்‘ என்னும் ஆங்கல நாளிதழுக்கு கொடுத்தசெய்தியில், தங்களது சங்கத்தின் தலைவர் சிறீலங்கா அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நிவாரணப்பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் கிடப்பதால், அதற்கான வரி தொடர்ந்து ஏறிக் கொண்டு செல்வதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதன் படி 27 கொள்கலன்களை ஏற்றிய பாரவூர்திகளின் மூலம், 680 மெற்றிக் தொன் பெறுமதியான பொருட்கள் வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இவ்வளவு காலம் துறைமுகத்தில் இந்த பொருட்கள் தேங்கி கிடந்தமைக்காக, அரசாங்கம் 20 லட்சம் ரூபாவையும், இலங்கை செஞ்சிலுவை சங்கம் 6 லட்சம் ரூபாவையும் தாமதக்கட்டணங்களாக செலுத்திய இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பரப்புரை இணைப்பாளர் றுக்சான் ஒஸ்வெல்ட் தெரிவித்திருந்தார்.

இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின்   உத்தரவின் பேரில் அவை துறைமுகத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வவுனியாவில் உள்ள முகாம்களுக்கு விநியோகத்துக்காக அனுப்பப்படுவதாக, நிவாரண சேவைகளுக்கான இலங்கை அமைச்சர் அமீர் அலி தெரிவித்திருந்தார்.

இலங்கையின் வடபகுதியில் போர் உக்கிரமடைந்திருந்த வேளையில், இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களால் கடந்த மார்ச் மாதத்தில் அனுப்பப்பட்ட உதவிப்பொருட்கள் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் 24/10/2009அன்று  இந்தப் பொருட்கள் 27 கொள்கலன்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளைக் களஞ்சியத்திற்கு வந்து சேர்ந்தது.

மருந்துகள் மருந்துவ உபகரணங்கள் அரிசி, மா, பருப்பு, சீனி, குழந்தைகளுக்கான பாலுணவு வகைகள், தகரத்தில் அடைக்கப்பட்ட பல்வேறு உணவுப்பொருட்கள் உட்பட பல அத்தியாவசிய பொருட்கள் இந்த நிவாரணப் பொருட்கள் விநியோகத்திற்கு வசதியாக வவுனியா களஞ்சியத்தில் இந்தப் பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு பொதிசெய்யப்பட்டு முதல் தொகுதியாக மனிக்பாம் 4 ஆம் வலயத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது எனவும்  முகாம்கள் மட்டுமல்லாமல், இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களிலும், அரசாங்கம் அனுமதிக்கும் இடங்களில்  இந்த நிவாரணப் பொருட்கள் இடம்பெயர்ந்த மக்களுக்குவிநியோகிக்கப்பட்டு விடும் என்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் எஸ்.எச்.நிமால்குமார் தெரிவித்திருந்தார்.

வவுனியா செஞ்சிலுவைச் சங்கத்தின் களஞ்சியத்தில் இருந்து இந்தப் பொருட்கள் உரியமுறையில் வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்ற போதிலும் மக்கள் பயன்படுத்த முடியாமல் பல பொருட்கள் காலவதியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதில் தனிநபர் சுரண்டல்களும் பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளும் இடபெறவில்லை என்று கூறமுடியாத நிலை தான் அக்காலத்தில் காணப்பட்டது.

வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் வன்னி மக்களுக்கு போய்சேர்வதற்காக உழைத்த அனைத்து பெருமக்களுக்கு நன்றி. ‚வன்னி மிசன்‘ மனிதாபிமான உதவிகளைத்தாங்கி சுமார் 884 தொன் உணவு, மருந்துப்பொருட்களை பெருவரிசை ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்கள் நாடு நாடாகக்சென்று புலம்பெயர் சமூகத் தொண்டர்கள் சேகரித்த உதவிப் பொருள்களை வழங்கிய அனைவருக்கம் இதனை ஏற்பாடு செய்திருந்த ‚அக்ட் நௌவ்‘ அமைப்பிற்கும்  வணங்கா மண் கப்பலில் கடைசி வரைபயணித்து நீண்ட சிரமங்கனை எதிர்கொண்ட  சிறிலங்காவின் போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவில் பணியாற்றிய திரு.கிறிஸ்ரியன் மற்றும்  பிரித்தனிய புலம்பெயர் தமிழர் திரு உதயணன் என்ற தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருக்கும்  தமிழக முதல்வர், அவரது புதல்வி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய செஞ்சிலுவை சங்கம், இந்திய வெளியுறவுத் துறை, தமிழக அரசு, சென்னை கப்பல் துறைமுக கழகம், வணங்காமண் கப்பலின்முகவர்கள், இலங்கை செங்சிலுவை சங்கம், ஊடகங்கள் என இன்னும் இதற்காக ஈடுபட்டோர் அனைவருக்கும் நன்றிகள். வணங்காமண் கப்பல் தொடர்பா பல வாதப் பிரதிவாதங்கள் மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும்  நிவாரணப்  பொருட்களை தமிழனுக்கு கொண்டு சேர்க்க வேண்டியது தமிழர்களின் கடமையாக இருந்தபோதிலும்  நன்றி தெரிவிப்பது எமது முறையாகும்.

– நிலவன்-