April 25, 2024

சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அவசர கடிதம்! வெளியான தகவல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வழங்கிய செவ்வி தொடர்பில் முழுத்தமிழ் உலகமும் அதிக விரக்தி அடைந்துள்ளது. எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமது கட்சிக்கு ஏற்படக்கூடிய பின்னடைவைத் தவிர்க்க சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மிகவும் அவசியமாகின்றது.

– இவ்வாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா ஆகியோருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார் இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சூ.சேவியர் குலநாயகம்.

இலங்கை அரசியலில் தமிழினத்தின் சார்பாக முக்கிய வகிபாகம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, சுமந்திரனின் போக்குக்கு விட்டுக்கொண்டு போனால் கட்சி மட்டுமல்ல தமிழினமே தேய்ந்து போகும் எனவும் அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

கடந்த 2004ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியாக இயங்கிய காலப்பகுதியில் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு எதிராக கட்சியின் மத்திய செயற்குழுவில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு செயற்பட்டமைக்கான முக்கிய காரணம், தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அவர் தெரிவித்த விமர்சனங்களாகும். கட்சியின் தலைமைப்பதவி மாற்றத்துக்காகவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாமல் போனமைக்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.

இந்த அனுபவத்தின் அடிப்படையில் எமது கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்றத் தேர்தல் அபேட்சகருமான எம்.ஏ.சுமந்தின் இம்மாதம் 08ஆம் திகதி அன்று சிங்கள ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கியுள்ளார். அதில் தமிழினம் சார்பாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தையும், தமிழீழ விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்தியும், எமது கட்சி தமிழீழ விடுதலைப்புலிகள் விடயத்தில் பிழையான அனுகுமுறையைக் கொண்டிருந்தது என்ற உண்மைக்குப் புறம்பான கருத்துக்களையும் கூறியுள்ளார்.

ஆனந்தசங்கரி கொண்டிருந்த நிலைப்பாட்டை விடவும் மோசமான கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் தமிழ்த் தேசியத்துக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் சுமந்திரன் பெருந்துரோகம் விளைவித்துள்ளார் என்றே மக்கள் கருதுகின்றார்கள்.

தனிப்பட்ட கருத்துக்களை யாரும், எப்படியும் கொண்டிருக்க முடியும். ஆனால், ஒரு அரசியல் கட்சியில், அதுவும் இன விடுதலை, சுதந்திரத்தை நோக்காகக் கொண்டு செயற்படும், இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து நின்றுகொண்டு கூட்டுப் பொறுப்பற்ற முறையில் சுமந்திரன் கருத்துக்கள் வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.

அடிப்படையில் மாறுபாடான கொள்கைகள், கருத்துக்கள் இருக்குமானால் கட்சிக்கு வெளியே சென்று கூறவேண்டும். பாகிஸ்தான் நாடு பிரித்துக்கொடுக்கும் விடயத்தில் மகாத்மா காந்தியுடனும், இந்திய காங்கிரஸ் கட்சியுடனும் முரண்பட்ட மூதறியர் இராஜி கட்சியை விட்டு வெளியேறி மும்பையில் பகிரங்க கூட்டம் கூடி அதில் விளக்கமறித்தார். அது முறையானதும், அரசியல் நாகரிகமும் ஆகும்.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடரும் அவாவோடு எப்படியும் சொல்லலாம், செயற்படலாம் எனவும் கருத்தக்கூடாது.

இலங்கை அரசியலில் தமிழனத்தின் சார்பாக முக்கிய வகிபாகம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, சுமந்திரனின் போக்குக்கு விட்டுக்கொண்டு போனால் கட்சி மட்டுமல்ல தமிழினமே தேய்ந்து போகும்.

ஆனந்தசங்கரிக்கு எதிரான தீர்மானித்தை நான் பிரேரித்து அதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் ஆனந்தசங்கரியே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகத் தொடர்கின்றார். இதனாலேயே இலங்கை தமிழரசுக் கட்சி மீளெழுச்சி பெற்று இன்று உயர்ந்து நிற்கின்றது. ஆனந்தசங்கரி, தமிழீழ விடுதலைப்புலிகள் மீது கொண்டிருந்த கருத்துக்களை விடவும் சுமந்திரன் மோசமான கருத்துக்களையே தற்போது கூறியுள்ளார். தமிழினத்தின் சார்பாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தையும் ஆயுதப் போராட்ட காலப்பகுதியில் எமது கட்சி நடந்து கொண்ட அணுகுமுறை பற்றியும் கொச்சைப்படுத்தியுள்ளார்.

இவற்றைக் கருத்தில்கொண்டு சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகின்றேன். எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஏற்படக்கூடிய பின்னடைவைத் தவிர்க்கவும் சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை அவசியமாகின்றது. முழுத்தமிழ் உலகமும் சுமந்திரனின் செவ்வி தொடர்பில் அதிக விரக்தி அடைந்துள்ளது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் – என்றுள்ளது.