April 19, 2024

தொலைபேசியில் அழைத்து கொலை?

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி வேலூர் பிரதேசத்தில் இனந்தெரியாதேரின் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பில் இருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கல்லடி வேலூர் 4ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த ஆட்டோ சாரதியான 29 வயதுடைய இராமசந்திரன் மனோரதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்
குறித்தநபர் சம்பவதினமான நேற்று இரவு வீட்டில் இருந்துள்ள நிலையில் சுமார் 6.30 மணியளவில் அவருடைய கையடக்க தொலைபேசிக்கு வந்து அழைப்பையடுத்து அவர் அந்த அழைப்புக்கு பதில் அளித்தவாறு வீட்டின் பின்பகுதியான வெற்று காணிப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
இதன் பின்னர் சுமார் அரை மணித்தியாலயத்தின் பின்னர் ஒரு சத்தம் கேட்டதையடுத்து அங்கு உறவினர்கள் சென்றபோது தலையால் இரத்தம் வழிந்து கீழே வீழ்ந்து உயிரிழந்த நிலையில் அவர் கிடப்பதைக் கண்டுள்ளனர் .அண்மையில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற சண்டையின் எதிரொலியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து மட்டு போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்ப ட்டுள்ளதுடன் இருவரை சந்தேகத்தில் இன்று சனிக்கிழமை (16) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்