April 18, 2024

பாதுகாப்பு முகக்கவசம் எங்கே? வாங்கிக்கட்டிய அதிகாரி!

கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் போதிய பாதுகாப்பின்றி பணியில் ஈடுபட்ட விவகாரம் உயர்மட்ட கவனத்திற்கு சென்றுள்ளது.
கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் யாழ்.காவல்துறையினர் முக கவசம் அணியாது நேற்றைய தினம் இரவு யாழ்,பல்கலைகழக பிரதான வாயில் பகுதியில் பிரசன்னம் ஆகியிருந்தனர். அத்துடன் கையுறைகள் இன்றி மாணவர்களின் அடையாள அட்டைகளை கைகளில் வாங்கி விபரங்களை பதிந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தந்தை செல்வா நினைவிடத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வின் போது , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கையுறை அணியாது நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ சுமார் 10 நிமிடம் கொரோனோ பற்றிய விளங்கங்களையும் சுகாதார நடைமுறைகள் பற்றியும் விளக்கம் கொடுத்திருந்தார்.
அதேபோன்று நேற்று முன்தினம் செம்மணியில் நடைபெற்ற நிகழ்விலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு விளக்கம் கொடுத்திருந்தார்.
அதுமட்டுமின்றி , கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.நகர் பகுதியில் நின்று வீதியில் செல்வோர் உரிய முறையில் முககவசம் அணிய வேண்டும் என வீதியில் செல்வோரை மறித்து விளக்கம் கொடுத்தும் இருந்தார்.
இந்நிலையில் அவரது பொலிஸ் குழுவில் உள்ள பொலிசார் சுகாதார முறைகளை கடைப்பிடிக்காது முக கவசம் கூட அணியாது அவ்விடத்தில் பிரசன்னமாகியிருந்தமை ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.