April 20, 2024

விடுதலைப்புலிகளின் தலைவர் குறித்து கருணாநிதி சொன்னது என்ன?

விடுதலைப்புலிகளின் தலைவர் குறித்து கருணாநிதி சொன்னது என்ன?

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “போராளிகளுக்கு மரணமில்லை” என்று சொன்னவர் கலைஞர் கருணாநிதி. அவருக்கு எல்லாருமே உடன்பிறப்புகள்தான். பாரபட்சமோ – பாகுபாடோ கிடையாது. ஒரு மூத்த சகோதரராகவே அவருடைய கருத்துகளும் ஆதரவும் ஆலோசனைகளும் இருந்துள்ளன என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் 1956-ம் ஆண்டு முதல் குரல் கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

தமிழீழ உரிமையை வலியுறுத்தி டெசோ என்ற அமைப்பைத் தொடங்கி – அகில இந்திய தலைவர்களை அழைத்து மாநாடு நடத்தியவர் தலைவர் கலைஞர்.

வெலிக்கடை சிறையில் நடந்த வன்முறையில் தமிழினப் போராளிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதைக் கண்டித்து மாபெரும் பேரணியை சென்னையில் நடத்திக் காட்டியவர் அவர்.

தமிழகத்திலிருந்த ஈழப் போராளிகளை நாடு கடத்த முயன்றபோது அதற்கு எதிராக, ஒருசில மணிநேரத்தில் இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி கண்டனப் பேரணி நடத்தியவரும் கலைஞர்தான்.

தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இனமானப் பேராசிரியருடன் இணைந்து ராஜிநாமா செய்தவர்.

இலங்கையிலிருந்து திரும்பிய இந்திய அமைதிக்காப்பு படையை, ‘என் தமிழ்ச்சாதியைக் கொன்று திரும்பும் படையை வரவேற்க மாட்டேன்’ என முதலமைச்சராக இருந்தபோதே அறிவித்தவர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்திற்காகவே கழகத்தின் ஆட்சி கலைக்கப்பட்டது என்பது வரலாறு.

ஈழத்தில் உள்ள அனைத்துப் போராளிக் குழுக்களும் சகோதர யுத்தத்தைக் கைவிட்டு, ஒன்றிணைந்து போராடி உரிமையை மீட்க வேண்டும் என்பதை தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினார்.

எல்லா அமைப்புகளையும் தன் உடன்பிறப்புகளாகவே கருதினார். விடுதலைப்புலி தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டபோது, முதல்வர் பொறுப்பில் இருந்த கலைஞர் எழுதிய இரங்கல் கவிதையும் அதற்காக அவரது ஆட்சியைக் கலைக்கச் சொல்லி கூப்பாடு போடப்பட்டதும் நாடறியும்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “போராளிகளுக்கு மரணமில்லை” என்று சொன்னவர் தலைவர் கலைஞர். அவருக்கு எல்லாருமே உடன்பிறப்புகள்தான். பாரபட்சமோ – பாகுபாடோ கிடையாது. ஒரு மூத்த சகோதரராகவே அவருடைய கருத்துகளும் ஆதரவும் ஆலோசனைகளும் இருந்துள்ளன.

தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் தலைவர் கலைஞர் அவர்களே பதிலளித்திருக்கிறார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக தனது அதிகார எல்லைக்குள்ளும், அதனைக் கடந்தும் மத்திய அரசிடம் ஈழத்தமிழர் நலனுக்காகப் பாடுபட்டிருக்கிறார்.

இலங்கை மலையகத் தமிழர்கள் இந்தியா அனுப்பப்பட்டபோது தமிழகத்தில் அவர்களுக்கான வாழ்வுரிமை தொடங்கி, ஈழ அகதிகள் முகாமில் உள்ள தொப்புள் கொடி சொந்தங்களுக்கு வாழ்வாதாராம் – கல்வி – வேலை என அனத்தும் கிடைப்பதற்கான திட்டங்கள் வரை பலவற்றையும் நிறைவேற்றியுள்ளார்.

ஈழத்தமிழர்களை இனரீதியாக ஒடுக்குவதை எதிர்த்து ஐ.நா.மன்றம் வரை சென்று மனு அளித்தவர் கழகத் தலைவர் தளபதி அவர்கள்.

ஈழத்தமிழர்களின் பெயரால் அரசியல் செய்ய விரும்புவோருக்கு, ஈழத்தமிழர் மீது எப்போதும் அக்கறை கொண்ட நாம் இடம் கொடுப்பது தேவையற்றது.

நம்முடைய இலக்கும் பயணமும் ஈழம் உள்ளிட்ட உலகெங்கும் வாழும் மக்களின் ஆதரவுடன் அவர்களுக்காகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கவனம் சிதையாமல் அதில் ஒருங்கிணைந்து பயணிப்போம்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.