März 27, 2024

சோதனை சாவடிகளை கண்டு கொள்ளாத சுமந்திரன்! கொதித்த சிறிதரன்

சோதனை சாவடிகளை கண்டு கொள்ளாத சுமந்திரன்! கொதித்த சிறிதரன்

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வரும் வரையும் இலங்கை இராணுவத்தின் இறுக்காமான சோதனை நடவடிக்கைகளினால் மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்குவதாக முன்னாள் உறுப்பினர் எஸ்.சிறிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் நேரடியாகவே முறையிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் போர்க்கால நிலைமை போன்று இராணுவம் செயற்படுவதாகவும் சிறிதரன் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

அப்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் அருகில் இருந்துள்ளார். (சிறிதரன் சுமந்திரனின் கட்சி)

இவ்வாறான இறுக்கமான சோதனை நடவடிக்கைகள் வவனியாவில் இருந்து கொழும்பு வரும்போது இல்லை. வடக்குக் கிழக்கு மாகாணம் தவிர்ந்த வேறெந்த மாகாணங்களிலும் இவ்வாறான கடுமையான சோதனைகள் இல்லை.

ஆகவே இந்தச் செயற்பாடு அடிப்படை மனித உரிமை மீறல் என்று கூறி கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் சட்டத்தரணி சுமந்திரனால் முறையிட முடியாதா?

இராணுவம் வடக்குக் கிழக்கில் சிவில் நடவடிக்கைகளில் தலையிடுகிறது என்று மக்கள் பலரும் நீண்டகாலமாகவே குற்றம் சுமத்துகின்றனர்.

ஆகவே கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை சட்ட வலுவுள்ளதாக்க வேண்டுமெனக் கோரி, மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியுமென்றால், தமிழ் மக்கள் சார்ந்த இந்த விடயங்கள் தொடர்பாக முறைப்பாடு செய்ய முடியாமல் போனது ஏன் என்ற கேள்வி நியாயமானதுதானே.

ஊரடங்குச் சட்டத்தைச் சட்ட வலுவுள்ளதாக்கிச் சட்ட ஆட்சியை நிலை நிறுத்துமாறும் அந்த முறைப்பாட்டில் சட்டத்தரணி சுமந்திரன் கோரியுள்ளார்.

மக்களைப் பாதுகாப்பதற்கே இந்த ஊரடங்குச் சட்டம். இது போர்க்காலச் சட்டமல்ல. கொரோன வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற எந்தவகையிலேனும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்தினாலே போதும்.

அது சட்ட வலுவுடையதாக இருக்க வேண்டுமா இல்லையா என்பதெல்லாம் பிரச்சினையல்ல—

சட்டம் மக்களுக்கானது மக்களின் பழக்க வழக்கங்களில் இருந்தும் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன—-

எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் அதனை ஏற்றுக் கொண்டு வீடுகளுக்குள் தாமாகவே முடங்கியிருக்கும்போது, அதற்குச் சட்ட வலுவுள்ளதா இல்லையா என்ற கேள்வியும் முறைப்பாடும் எதற்கு?

ஆகவே ஊரடங்குச் சட்டம் பற்றிய சட்டத்தரணி சுமந்திரனின் சந்தேகமும் முறைப்பாடும் தற்போதைய சூழலில் யாரோவொரு சிங்கள அரசியல் தலைவரைத் திருப்திப்படுத்தும் அரசியல் என்பது கண்கூடு—

—அப்படியில்லையென்றால், இலங்கைத் தீவின் ஏனைய பகுதிகளில் இல்லாத இராணுவச் சோதனைச் சாவடிகள், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது என்ற போர்வையில் வடமாகாணத்தில் மாத்திரம் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளமை குறித்து முறைப்பாடு செய்ய விருப்பமில்லாமல் போனது ஏன்?

இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறை, மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற சுயாதீன அரச நிறுவனங்கள், ஈழத் தமிழர் நலன்சார்ந்து தீர்ப்பு வழங்குமா என்ற கேள்விகளுக்கும் அப்பால், குறைந்த பட்சம் இவ்வாறான அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டால், அது பேசுபொருளாகவேனும் இருக்குமல்லவா?

ஈழத் தமிழர் சார்ந்த விடயங்களை பேசுபொருளாக்காமல், சிங்கள அரசியல் தலைவர்களின் நலன்கள் சார்ந்த விடயத்தில் அல்லது சிங்கள மக்களுக்குமான அடிப்படை உரிமைகள், ஜனநாயகம் பற்றிப் பேசுவதென்பது எந்தவகையான அரசியல் என்ற கேள்விகள் எழாமலில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் கூடச் சுமந்திரனின் இவ்வாறான அரசியல் குறித்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை? வீட்டுச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்பதாலா?

ஊரடங்குச் சட்டத்தை சட்ட வலுவுள்ளதாக்கிச் சட்ட ஆட்சியை நிலை நிறுத்துமாறும் சுமந்திரன் தனது முறைப்பாட்டில் கோரியமையானது, இலங்கையில் சட்ட ஆட்சியே இல்லையென்பதை கோடிகாட்டியுள்ளது. அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர்கள் பலர் அது குறித்த கேளவிகளை ஏற்கனவே எழுப்பிருக்கின்றனர்.

சரி அப்படித் தான் என்றாலும், வடக்குக் கிழக்கில் சட்ட ஆட்சி???